சனி, 28 நவம்பர், 2009

  ஜெர்மனி நீதிமன்றத்தில் வெள்ளை நிறவெறியனால் கொல்லப்பட்ட முசுலீம் பெண்


ஜெர்மனி, டிரெஸ்டென் நகரம். நீதிமன்றத்தில் வைத்து ஒரு எகிப்திய கர்ப்பிணிப் பெண்மணி, வெள்ளை நிறவெறியன் ஒருவனால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

16 கத்திக்குத்துகளை வாங்கி ஸ்தலத்திலேயே மரணமடைந்த மார்வா என்ற எகிப்தியப் பெண்ணும், கொலையாளியான அலெக்ஸ் என்ற ஜெர்மன் நபரும் அயலவர்கள். வெளி நாட்டவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அலெக்ஸ், பூங்காவில் தன் 3 வயது மகனோடு பொழுதுபோக்கிக் கொண்டி ருந்த 4 மாத கர்ப்பிணியான முக்காடு போட்டிருந்த மார்வாவைப் பார்த்து "பயங்கரவாதி' என தூற்றியுள்ளார்.



மார்வா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், இனவெறிப் பாகுபாட்டு குற்றச்சாட்டில் அலெக்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அலெக்ஸ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு அலெக்சிற்கு பாதகமாக அமைந்திருந்தது. விசாரணையின் போது, மார்வா சாட்சியமளித்திருந்தார். நீதிபதி தீர்ப்புக் கூறிய பின்னரே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் மூன்று வயது மகனின் கண் முன்னால் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் இருந்து தனது மனைவியைப் பாதுகாக்க முயன்ற கணவனை, காவலில் நின்ற போலீஸ்காரர் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். தாக்குபவர் யார் என்று தெரியாமல் தடுமாற்றத்தில் சுட்டு விட்டதாக, போலீஸ் பின்னர் விளக்கமளித்தது. இந்த சம்பவம் குறித்து ஜெர்மன் பத்திரிகையில் வந்த செய்தி.



இதுவரை காலமும் ஒரு மூன்றாம் உலக நாட்டில் மட்டுமே இது போன்ற நீதிமன்றக் கொலைகள் நடக்க வாய்ப்புண்டு, என்று பலர் நினைத்திருக்கலாம். பட்டப்பகலில், பலர் பார்த்திருக்கையில், அதுவும் நீதிமன்றத்தினுள் எப்படி இந்தக் கொலை நடக்கலாம்? என்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "நாகரீக மடைந்த மக்கள் வாழும்' ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், இசுலாமியர் மீதான வெறுப்பின் விளைவாக நடந்த இந்தக் கொலை, ஜெர்மனியில் அறிவு ஜீவிகள் மட்டத்தில் மட்டும் சிறு சலசலப்பை தோற்றுவித்துள்ளது. மற்றபடி, எந்த ஒரு ஐரோப்பிய ஊடகமும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. சில நாளேடுகளில் இந்தச் செய்தி, உள்பக்கத்தில் ஒரு சிறு மூலையில் பிரசுரமாகி இருந்தது. ஒரு வேளை பலியானவர் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்தவராக இருந்து, குத்திய கொலையாளி ஒரு இசுலாமிய எகிப்தியர் ஆக இருந்திருந்தால்? அனைத்து ஊடகங்களிலும் அதுவே அன்று முதன்மைச் செய்தியாக இருந்திருக்கும். "அல் கைதாவின் பயங்கரவாதத் தாக்குதல்' என்று சர்வதேச ஊடகங்களிலும் ஒரு சுற்று வந்திருக்கும். மேற்குலகில் இனவாதம் எப்படி நிறுவனமயப்பட்டுள்ளது என்பதற்கு, மேற்குறிப்பிட்ட செய்தி வழங்கல் நெறிமுறை ஒரு உதாரணம்.



ஜெர்மனியில் இனவெறிக்கு பலியான எகிப்தியப் பெண் மார்வாவின் மரணச் சடங்கு, அவரது சொந்த ஊரான அலெக்சாண்ட்ரியா நகரில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள். எகிப்தியப் பத்திரிகைகள் "ஹிஜாப்பிற்காக (முசுலிம் பெண்கள் தலையில் அணியும் முக்காடு) தியாக மரணத்தை தழுவிக் கொண்டவர்' என்று புகழாரம் சூட்டின. பல அரசியல் தலைவர்களும் மார்வாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர்.



ஐரோப்பாவில் அரபு மக்களின் நலனுக்காக பாடுபடும் AEL மட்டும் கண்டன அறிக்கையை வெளியிட்டது. அந்த அமைப்பின் தலைவர் அபு ஜாஜா "ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம் மக்களையும், அவர்களது மதத்தையும் கிரிமினல் மயப்படுத்தியதன் விளைவு இது'' என்று தெரிவித்துள்ளார்.



இது இப்படியிருக்க, வட அயர்லாந்து தலைநகரமான பெல்பாஸ்டில் வாழும் அந்நியர்களை, குறிப்பாக இந்திய, முசுலிம், ரொமேனியா சமூகங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டுமென நிறவெறி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. Ulster Young Militants (UYM) என்ற, முன்னாள் புரட்டஸ்தாந்து தீவிரவாத அமைப்பான Ulster Defence Association - னின் இளைஞர் முன்னணி, வெளிநாட்டவரை விரட்டும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.



இந்த அமைப்பின் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கடிதங்கள், பெல் பாஸ்டில் வாழும் வெளிநாட்டவர் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள ன. "ஜூலை 12 ஆம் திகதிக்கு முன்னர், வெள்ளையரல்லாத அந்நியர்கள் யாவரும் வட அயர்லாந்தை விட்டு வெளியேறி விட வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது . ஜூலை 12ஆம் திகதி, புரட்டஸ்தாந் து கிறிஸ்தவர்களின் பண்டிகை தினம் என்பதும், Ulster Defence Association முன்னர் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசால் நிர்வகிக்கப்பட்ட துணைப்படை என்பதும் குறிப்பிடத்தக்கது.



மேற்குறிப்பிட்ட செய்தி இந்திய செய்தி ஊடகங்களிலும் வந்திருந்தது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர் என்றபடியால் தான் விஷேச கவனம் செலுத்தி வெளியிட்டிருந்தன. ஏற்கனவே ஜூன் 17ஆம் திகதிக்கு முன்னர், ரொமேனியர்களை வெளியேறும்படி கோரி இதே அமைப்பினால் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவ்வாறு வெளியேறாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்றும் பயமுறுத்தப்பட்டனர். ரொமேனியா குடும்பம் ஒன்றின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர், பெல்பாஸ்டில் வசித்த அனைத்து ரொமேனியா குடும்பங்களு ம் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அரசு செலவில், விமானம் மூலம் ரொமேனியா திருப்பி அனுப்பப்பட்டனர்.



ஜூலை 2ஆம் திகதி, நிறவெறிக்கு எதிரான ஐரிஷ் பிரஜைகள், பெல்பாஸ்ட் நகரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இதன் மூலம் அனைத்து ஐரிஷ் மக்களும் நிறவெறியை ஆதரிப்பவர்கள் அல்ல எனக் காட்ட விரும்பினர். இந்த ஊர்வலத்தில் பேசிய தொழிற்சங்க தலைவர் ஒருவர், ""தொழிற்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வெளிநாட்டு தொழிலாளர்கள் அவசியம். ஐரிஷ் மக்களின் சமூகநலன் காப்புறுதிக்கு அவர்கள் பங்களிப்பு செலுத்துகின்றனர். இனப்பாகுபாடு காட்டுவோரைத் தண்டிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார். · கலையரசன்



நன்றி: http://kalaiy.blogspot.com

Read more...

  ஏன் தேர்தலை அவசரமாக மகிந்தா கும்பல் நடத்துகின்றது!?






இரண்டு வருடங்கள், தொடர்ந்தும் மக்களை ஓடுக்கி ஆளமுடியும்;. தனக்கு எதிரான ஒரு பிரதான பொது எதிரியை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவசரமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?


இன்னும் இரண்டு வருடத்தின் பின்னான தேர்தலை, இந்த அரசு வெல்ல முடியாது. மக்களுக்கு எதிரான பாரிய அடக்குமுறையின்றி ஆள முடியாது. இந்த உண்மையால், தாங்கள் அதிகாரத்தை தக்கவைத்து தொடர்ந்தும் மக்களை அடக்கியாள தேர்தலை முன் கூட்டி நடத்துகின்றனர். இந்த அவசர தேர்தல், எதிர்காலத்தில் சமூக கொந்தளிப்பும், சமூக நெருக்கடியும் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.



பாரிய சமூக ஓடுக்குமுறையை ஏவி ஆளமுடியும் என்ற எதார்த்தம், எதிர்காலம் இலங்கையில் அமைதியற்ற கொந்தளிப்பான காலமாக இருக்கும் என்பதன் அடிப்படையல் ஆளும் வாக்கம் தன்னை தயார் செய்கின்றது.



இலங்கை மக்கள் என்றுமில்லாத வகையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் காலம், இனிவரும் ஆண்டுகள்தான். இலங்கைக்குள் ஏகாதிபத்திய முரண்பாடுகளும், பிராந்திய முரண்பாடுகளும் கூர்மையாகும் காலமும் இதுதான். யுத்த பொருளாதாரம் முடிவுக்கு வர, யுத்தக் கடன் மேலெழுந்து வரும் காலமும் இதுதான். இனவாதத்தை விதைத்து அரசியல் செய்த காலம் முடிவுக்குவர, வர்க்க முரண்பாடு மேலெழும் காலம் இதுதான். அரசுக்கு எதிராக இனங்கள் ஜக்கியப்படும் காலமும் இதுதான்.



வாங்கிய கடனுக்கு தேசிய சொத்துகளை விற்கும் காலமிதுதான். வட்டி கட்ட மக்களின் நுகர்வை புடுங்கி ஏற்றுமதி செய்யும் காலமிதுதான்.



வர்க்க முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக கொண்ட கொந்தளிப்பான ஒரு கட்டத்தை நோக்கி இலங்கை மாறிச்செல்லுகின்றது.



மறுபக்கத்தில் தமிழினம் பலவீனப்பட்டு அரசியல் ரீதியாக சிதைந்து விட்டது. இந்த நிலையில் உள்நாட்டில் மக்களை திசைதிருப்ப மக்களைப் பிளக்கும் எதிரிகளின்றி ஆளும் வாக்கம் தவிர்க்கும் காலமும் இதுதான்.



இலங்கை மக்களே இனி நேரடியான எதிரியாக, அரசு அதை ஒடுக்கும் காலமும் இது தான். ஆளும் வர்க்கம் மக்களை ஏமாற்றி ஆள, மக்களை பிளக்கும் முரண்பாடு இன்றி தவிக்கின்றது. அரச பாசிசம் மக்களை பிளக்கும் முரண்பாட்டை தன் பாசிசம் மூலம் அழித்தொழித்ததால், மக்களை பிளக்கும் முரண்பாடு இன்றி தனிமைப்பட்டு நிற்கின்றது. இதை உணரும் தமிழ் மக்கள், புலிகளின் பாசிசத்தின் விளைவால், தனிமைப்பட்டு சிதைந்து கிடக்கின்றனர். அவர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து அரசை எதிர்கொள்வதன் ஊடாகவே, தங்கள் உரிமையைப் பெறமுடியும். இதைவிட வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது.



இந்த நிலையில் அதிகாரத்தையும், வர்க்க பாசிசத்தையும் தன் குடும்பம் சார்ந்து தக்கவைக்கவே, மகிந்த இந்த அவசரத் தேர்தலை இன்று நடத்துகின்றார். இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால், பேரினவாதத்தை யுத்தம் மூலம் வென்று யார் நிறுவியவர்கள் என்பதை முன்னிறுத்தி களமிறங்கியுள்ளனர். யுத்தத்தை நடத்தியவர்கள், யுத்தத்தை முன்னின்று செய்தவர் என்ற அதிகாரப் பிளவும், இதில் யாரை வெல்ல வைப்பது என்பதே இந்த தேர்தலின் மைய சாரம். இதை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் எல்லைக்குள், இந்த தேர்தல் இனவாத எல்லைக்குள் நடக்கின்றது.



இதன் மூலம் இலங்கை மக்கள் கட்டிய கோமணத்தையும் உருவ நடக்கும் தேர்தல். இதை வாக்காளர்கள் உணர முடியாதவாறு "யுத்த வெற்றி" என்ற பேரினவாத மயக்கத்துக்குள் நடத்தப்படுகின்றது.



பாரிய இனப் படுகொலையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரப் பிரிவுகளுக்கு இடையிலான மோதல், எதிர் அரசியலாகின்றது. யுத்தக் குற்றத்தின் முழுப்பரிணாமத்துடன், குற்றப் பரம்பரையினர், தங்கள் அதிகாரத்தை தக்கவைக்க நடக்கும் தேர்தல் கூத்தாகின்றது.



தங்கள் பாசிச அதிகாரத்தை ஆளும் வர்க்கம் சார்ந்து தக்கவைக்க முனைகின்றனர். ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள், தம் எதிர்தரப்பு மீதான குற்றச்சாட்டுகளாக யுத்தக் குற்றத்தின் ஒரு பகுதியை நடுச்சந்திக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.



இதன் பின்னணியில் ஏகாதிபத்தியங்கள் முதல் பிராந்திய நலன் சார்ந்த முரண்பாடுகளும் இயங்குகின்றது. இதை அம்பலப்படுத்துவதன் மூலம், தேர்தல் முடிவை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இவையும் இருக்கும்.



மக்கள் இனவாத எல்லைக்குள், பாசிச பிரச்சார நெடிக்குள், பொய்களையம் புரட்டுகளையும் நம்பி வாக்கு போடும் மந்தைகளாகவே இலங்கை மக்கள் வழிநடத்தப்படுகின்றனர்.



மக்கள் மேலான ஒடுக்குமுறையை யார் இனி செய்வது என்பதை அங்கீகரிக்க கோரி, தேர்தலை வாக்களிக்கக் கோருகின்றனர். இது தான் இந்தத் தேர்தலின் ஜனநாயகமாகும்.



மக்களுக்கு கிடைக்கப் போவதோ ஒடுக்குமுறைதான். இதையே தான் மீண்டும் வரலாறு நிரூபிக்கும்.



பி.இரயாகரன்
28.11.2009

Read more...

இந்திய வரலாற்றின் கரும்புள்ளியாகவும் மதவாத அரசியலுக்கு அடித்தளமாகவும் இருக்கும் அயோத்திப் பிரச்சனை குறித்து ஒரு பார்வை: கி.பி.1528 முகலாய மன்னர் பாபர்

இந்திய வரலாற்றின் கரும்புள்ளியாகவும் மதவாத அரசியலுக்கு அடித்தளமாகவும் இருக்கும் அயோத்திப் பிரச்சனை குறித்து ஒரு பார்வை:
கி.பி. 1528: முகலாய மன்னர் பாபரிடம் பணியாற்றிய மீர்பாகி அயோத்தியில் மசூதியைக் கட்டினார்.
babri7
கி.பி. 1853: இந்த இடத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இருந்தது என்றும், இது ராமர் பிறந்த இடம் எனவும் இந்துக்கள் உரிமை கொண்டாடினர். அயோத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1857: மசூதி இருந்த இடத்தின் ஒரு பகுதியை இந்து சமயத் துறவிகள் கைப்பற்றி ஆலய வழிபாட்டை நடத்தினர்.
கி.பி. 1859: வழிபாட்டுத் தலங்களைப் பிரிக்கும் வகையில் சுற்றுச் சுவரை அப்போதைய பிரிட்டிஷ் அரசு கட்டியது.
கி.பி. 1934: இந்தியா முழுவதும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. பாபர் மசூதியின் ஒரு பக்க சுற்றுச் சுவரும் மேல் பகுதியும் சேதப்படுத்தப்பட்டன.
கி.பி. 1949: மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ராமரின் சிலையை அங்கு வைத்தனர். இதையடுத்து இப்பகுதியை சர்ச்சைக்குரிய இடமாக அரசு அறிவித்து பூட்டிவிட்டது.
கி.பி. 1983: ராமர் பிறந்த இடத்தை (?) மீட்டு, அங்கு ராமர் ஆலயம் கட்டுவதற்கான குழுவை விசுவ இந்து பரிசத் இயக்கம் உருவாக்கியது. இதற்காக எல்.கே. அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றது.
கி.பி. 1986: பாபரி மஸ்ஜித் தலத்தின் வாயிற்கதவின் பூட்டைத் திறந்து இந்துக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்குமாறு பைசாபாத் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் பாபர் மசூதி செயல்கமிட்டி அமைக்கப்பட்டது.
கி.பி. 1989: மசூதிக்கு அருகில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிலைவழிபாட்டுக்கு முந்தைய ராஜீவ் காந்தி அரசு அனுமதி வழங்கியது. அங்கு ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1990: ராமர் கோயில் கட்டும் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அத்வானி ரத யாத்திரை நடத்தினார்.
அயோத்தியில் ஒரு லட்சம் கரசேவகர்கள் திரண்டனர். சர்ச்சைக்குரிய இடத்தைத் தகர்க்க முயற்சித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 30 பேர் உயிரிழந்தனர்.
கி.பி. 1992: ஜூலை மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
கி.பி. 1992: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அங்கு தற்காலிக ராமர் கோயில் அமைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
கி.பி. 1993: பாபர் மசூதி இடத்தைச் சுற்றியிருந்த 67 ஏக்கர் நிலத்தை முந்தைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு கையகப்படுத்தியது. அங்கு ராமனின் வரலாறு பற்றி கதாகலாட்சேபம் நடத்தும் பூங்கா அமைக்கத் திட்டமிட்டப்பட்டது.
கி.பி. 1994: அரசு கையகப்படுத்திய இடத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அது தீர்ப்பளித்தது.
கி.பி. 2002 ஜனவரி: ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளப் போவதாக விசுவ இந்து பரிசத் இயக்கம் அறிவித்தது.
கி.பி. 2002 பிப்ரவரி 16: சர்ச்சைக்குரிய அயோத்திப் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பே சரியான தீர்வாக அமையும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். நீதிமன்றத் தீர்பபுக்குக் கட்டுப்படுவதாக விசுவ இந்து பரிசத்தும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பும் அறிவித்தன.
கி.பி. 2002 மார்ச் 6: அயோத்தி வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு அலாகாபாத் உயர்நீதி மன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
கி.பி. 2002 மார்ச் 10: பாபர் மசூதி இடத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பிவிட்டு பூஜை நடத்த அனுமதிக்கலாம் என்ற காஞ்சி சங்கராச்சாரி முன் வைத்த ஒரு திட்டத்தை இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்தது.
கி.பி. 2002 மார்ச் 11: அயோத்தியில் பூஜை நடத்துவதில் நீதிமன்றத் தீர்ப்புப்படி மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.
கி.பி. 2002 மார்ச் 13: அயோத்தியில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அங்கு பூஜையோ இதர நிகழ்ச்சிகளோ நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
--islamicdvd.blogspot--

Read more...

வெள்ளி, 27 நவம்பர், 2009

ஜின்னா சாகிப்


“1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்... ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன். என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில் தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.’’இதைச் சொன்னது, சினிமா நடிகர் அசாத் - இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. நாடு துண்டாக்கப்படுவதற்கு முன்பு பம்பாய் திரைப்படத்துறையில் இருந்தான். அதற்குப் பிறகு லாகூரில் குடியிருக்க, அங்கு மற்ற சக நடிகர்கள் போல வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறான். பாகிஸ்தானில் திரைப்படத்துறை அப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தது. அவன் காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்தவன் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்ததால், ஒரு நாள் அவனைத் தேடிச் சென்றேன். அவனுடைய கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு நான் பல சந்திப்புகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இனி அசாத்தே பேசட்டும்.“ஒரு சமயம் காலிப் இளமையாய் இருந்தது போல் தான் நானும் இருந்தேன். அந்த மாபெரும் கவிஞன் அரசியல் இயக்கத்தால் உள்ளிழுக்கப் பட்டானா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்றாலும் நான் அகில இந்திய முஸ்லீம் லீக்கினுடைய உறுதியான தொண்டன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். மற்ற எத்தனையோ இளைஞர்கள் போலவே தான் நானும் காஸியாபாத் கிளையின் நேர்மையான உறுப்பினராக இருந்தேன். நேர்மையாக என்று சொல்வதற்குக் காரணம் என்னிடம் இருந்தது எல்லாம் அது ஒன்று தான்.முகமது அலி ஜின்னா டெல்லி வந்த போது, அதுவரை, அந்த அளவில் எவருமே பார்த்திராத ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டதை என்னால் தெளிவாக நினைவு கூர முடிகிறது. காஸியாபாத் வாலிபர்களான நாங்கள் அந்த நிகழ்வு பெரும் வெற்றியை அடைவதற்குச் சாதாரணமாக பங்காற்றவில்லை.எங்கள் கிளையை தலைமை ஏற்று நடத்தியவர் பின்னாளில் பாகிஸ்தானின் கவிஞர் என்று அறியப்பட்ட, மிகவும் துடிப்புள்ள வாலிபனான ‘அன்வர் குரேஷி’யேதான். அந்த நிகழ்ச்சிக்குப் பிரத்யேகமான கவிதை ஒன்றை அவர் எழுதித்தர நாங்கள் எல்லோரும் அதை ஊர்வலத்தில் பாடிக்கொண்டு சென்றோம். தாளம் தவறியதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நாங்கள் பாடிக்கொண்டு சென்றோம். எங்கள் தொண்டையில் இருந்து வெளியேறிய சுருதி சரியானதா தவறானதா என்றெல்லாம் நாங்கள் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை. காலிப் சொன்னதை நினைத்துப்பார்: ‘நீ என்ன பேசுகிறாய் என்பதோ, நீ பேசுவது தாளத்துக்கு உட்பட்டதா, இல்லையா என்பதோ முக்கியமான விசயமே இல்லை. எது முக்கியமானது என்றால் நீ பேச வேண்டும்.’ டெல்லியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஜும்மா மசூதியில் இருந்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஊர்வலம் தொடங்கி விண்ணைப் பிளக்கும் கோஷங்களோடு சாந்தினி சௌக், லால் கன்வான், ஹெளக் காஸி மற்றும் சௌரிபஜார் வழியாக சென்று முஸ்லீம் லீக் அலுவலகத்தில் முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில்தான் முகமது அலி ஜின்னாவுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காயிதே அஸாம், அதாவது மாபெரும் தலைவர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதாக நினைக்கிறேன். ஆறு குதிரைகள் பூட்டிய திறந்த வண்டியில் அவர் இருந்தார். ஒவ்வொரு முஸ்லீம் லீக் தலைவரும் அன்று எங்களோடு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். ஆண்கள் மிதிவண்டி, மோட்டார் வண்டி, ஏன் ஒட்டகம் இழுத்த வண்டியில் கூட வந்தார்கள். எல்லாம் மிக ஒழுக்கத்தோடு நடந்தது. எல்லாம் கண்டிப்பாக ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் தலைவருக்கு அது பெருத்த சந்தோசத்தைக் கொடுத்தது.என்னைப் பொருத்தமட்டில், அந்த ஊர்வலம் மிகவும் உணர்வு பூர்வமாக என்னைப் பாதித்தது. நான் அதனால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டேன். என் கண்கள் முதல் முறையாக ஜின்னா சாகிப்பைப் பார்த்த போது எப்படி உணர்ந்தேன் என்பதைக் கூட என்னால் இப்போது சரியாக நினைவு கூர முடியவில்லை. நான் திரும்பிப் பார்த்து அந்த உணர்வுகளை ஆராய முற்பட்டால், நான் அவரை நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னரே அவர் மீது இருந்த ஈடுபாட்டில் யாரோ ஒருவர் எவரையோ சுட்டிக்காட்டி, “அதோ உன்னுடைய காயிதே அஸாம்’ என்று சொல்லியிருந்தாலும் நான் அதை முழுமையாக நம்பி அவரைப் பார்த்ததில் தடுமாற்றம் கொள்ளும் அளவிற்கு சந்தோசப்பட்டிருப்பேன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நம்பிக்கை அப்படிப்பட்டது தான். ஓரு இழை சந்தேகமும் இல்லாமல் மிகச் சுத்தமானது. பழைய டெல்லி சாலைகளில் அந்த ஊர்வலம் சுழன்று கொண்டிருந்த போது, ஜின்னா சாகிப்பைப் பல கோணங்களில் இருந்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது திடீரென்று ஓர் எண்ணம் என் மண்டைக்குள் உதித்தது. எப்படி என்னுடைய காயிதே, என்னுடைய மிகப்பெரிய தலைவர் இவ்வளவு பலவீனமாகவும் உடைந்து போகிறாற் போலவும், மெலிந்தும் இருக்க முடியும்!காலிப் ஒரு முறை, அவரைப் பார்க்க வந்த அவருடைய காதலியைக் கண்டு அதிசயித்துப் போனாராம். ஆச்சரியத்தில் அந்தக் கவிஞர் அவளையும், அவள் நுழைந்த அந்த வீட்டையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஏறக்குறைய நானும் அப்படித்தான் உணர்ந்தேன். உடைந்து போகிறாற் போல் இருக்கும் காயிதேவின் உடலையும், என்னுடைய திடமான கட்டுமஸ்தான உடலையும் பார்த்து, ஒன்று நான் சுருங்கி விட வேண்டும் அதாவது நான் அவரைப்போல் ஆகி விடவேண்டும் அல்லது அவர் என்னைப்போல் மாறிவிட வேண்டும் என்றே விரும்பினேன். அவருக்குக் கேடு நினைப்பவர்களிடம் இருந்து அதுவும் அப்படி நினைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லப்பட, அவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன்.வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, கலாப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்னுள் மிக ஆழத்தில் மறைந்துக் கிடந்த துடிப்பும் என் இருப்புக்கொள்ளாமையோடு சேர்ந்துக் கொண்டது. அதனால் பம்பாய்க்கு பயணம் செய்து அந்த நகரத்தில் என் அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்து பார்ப்பது என்று ஒரு நாள் முடிவு செய்தேன். எனக்கு எப்போதும் நாடகம் நடிப்பு என்று ஈடுபாடு உண்டு அதனால் நான் அங்கு இருந்தேன். தேச சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலைக் காட்டிலும் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே என்னுள் மேலோங்கி இருந்தது. மனிதன் தான் எத்தகைய முரண்பாடுகளின் மொத்தத் தொகுப்பு! நான் பம்பாயை அடைந்த போது, இம்பீரியல் சினிமா கம்பெனி தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குள் நுழைவது ஏறக்குறைய சாத்தியமில்லாத காரியமாகவே இருந்தாலும் நான் தொடர்ந்து முயற்சித்து, இறுதியில் தினக்கூலியாக எட்டணா வாங்கும் துணை நடிகனானேன். வெள்ளித்திரையில் பெரிய நடிகனாக வேண்டும் என்ற என் கற்பனையை இது எவ்விதத்திலும் தடைசெய்யவில்லை.இயல்பாகவே நான் எல்லோரிடமும் இணக்கமாகப் பழகக்கூடியவன். எனக்கு இனிமையாகப் பேசத் தெரியாமல் இருந்தாலும் விட்டெறிந்து பேசக்கூடியவன் இல்லை. என்னுடைய தாய்மொழி உருதுவாக இருந்ததால் - கம்பெனியில் எல்லா பெரிய நட்சத்திரங்களும் இதை அறியாதவர்களாக இருந்தது, எனக்கு உதவக்கூடியதாக இருந்தது. இந்த மொழி பேசப்படாத பம்பாயில், அது எனக்கு உதவியாக இருந்தது. ஆனால் எங்கு பேசப்படுகிறதோ, அதாவது டெல்லியில் அப்படி இல்லாதது விசித்திரமானது தான். திரைப்படங்களில் பேசப்படும் மொழி பொதுவாக உருது அல்லது இந்துஸ்தானியாக இருந்ததால் பெரிய நட்சத்திரங்களுக்கான வசனங்களை எழுதவும் படிக்கவும் நான் மிகவும் அவசியமானவனாக இருந்தேன். அவர்களுடைய விசிறிகள் எழுதும் கடிதங்களை அவர்களுக்குப் படித்துக்காட்டி, அதற்குப் பதில்களும் எழுதிக் கொடுப்பேன் ஆனாலும் இப்படி படிப்பதும், எழுதுவதும் என்னுடைய குறிக்கோளை அடைவதற்கு எவ்விதத்திலும் பயனுள்ளதாக இல்லாமல் இருந்தது. “எக்ஸ்ட்ரா’ தான் நான். ‘எக்ஸ்ட்ரா’வாகவே தான் இருந்தேன்.அந்த நாட்களில் இம்பீரியல் கம்பெனியின் உரிமையாளர் சேத் அர்தேஷிர் இரானியினுடைய அந்தரங்கக் காரோட்டியாக இருந்தவனிடம் - அவனுடைய பெயர் புதான், நான் நட்புக் கொண்டிருந்தேன். அவன் செய்த முதல் காரியம், எனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தது தான். அவனுடைய ஓய்வு நேரங்களில், பொதுவாக அது பெரிய அளவில் கிடைப்பது இல்லை என்றாலும், அதை எனக்குக் கற்றுக் கொடுத்தான். அவன் செய்து கொண்டிருப்பதை, சேட் கண்டு பிடித்துவிட்டால் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார் என்று எப்போதும் பயந்துக் கொண்டிருந்தான். இந்தக் கட்டுப்பாடுகளால், என்னுடைய புத்திசாலித்தனம் மற்றும் உற்சாகத்தை மீறி, மோட்டார் வண்டி ஓட்டுவதில் நான் நிபுணத்துவம் பெற முடியாமல் போயிற்று. என்னால் செய்ய முடிந்தது சந்தர்ப்பம் கிடைத்த போது எல்லாம் பம்பாயில் நூல் பிடித்தாற்போல் நேராக இருந்த சாலைகளில் மட்டுமே சேத் அர்தேஷிர் இரானியின் வண்டியை ஓட்டமுடிந்தது. ஒரு கார் எதனால் ஓடுகிறது என்றோ, அதன் உள்ளே இருக்கும் பாகங்கள் என்னவென்றோ, எனக்குச் சுத்தமாக எதுவும் தெரியாது.நடிப்பு என்னை முழுமையாய் ஆட்கொண்டது என்றாலும் அது என் மண்டைக்குள் மட்டுமே இருந்தது. என் இதயம் முழுக்க, முஸ்லீம் லீக் மீதும், அதை நடத்திச் செல்லும் சக்தியாய் இருந்த காயிதே அஸாம் முகமது அலி ஜின்னா மீதும் காதலால் நிரம்பியிருந்தது. இம்பீரியல் சினிமா கம்பெனியில் வேலை இல்லாமல் நேரத்தைக் கழித்த போதும், கென்னடி பாலம், பின்டி பஜார், முகமது அலி சாலை, அல்லது விளையாட்டு இல்லம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் போதும், காங்கிரஸ் முஸ்லீம் லீக்கை எப்படி நடத்துகிறது என்பது பற்றி முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருப்போம். இம்பீரியல் கம்பெனியில் எல்லோருக்கும். நான் முஸ்லீம் லீக்கின் தீவிர ஆதரவாளன் என்றும், காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் தொண்டன் என்றும் தெரிந்து தான் இருந்தது. அந்த நாட்களில் காயிதே அஸாம் மீது பற்றுக் கொண்டிருப்பதனாலேயே, ஒரு இந்து நம்முடைய எதிரியாகிவிடவில்லை. ஒருவேளை, இம்பீரியல் கம்பெனியில் காயிதே பற்றி எல்லோருக்கும் தெரிந்திராமலும் இருக்கலாம். நான் அவரைப் புகழ்ந்து பேசும் போது, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சினிமா நடிகரைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதாகக்கூட சிலர் நினைத்திருக்கலாம்.அந்த நாட்களில் மிகவும் பிரபலமான கதாநாயகனான நடிகர் டி.பில்லிமோரியா ஒரு நாள், “டைம்ஸ் ஆப் இந்தியா’’ பத்திரிகையை என்னிடம் கொடுத்து, “பார், உன்னுடைய ஜின்னா சாகிப் இதில் இருக்கிறார்’’ என்றான். நான் அவருடைய புகைப்படம்தான் அன்று வந்திருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் எந்தப் பக்கங்களிலும் அதைக் காண முடியாததால், “அவருடைய படம் எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டேன். ஜான் கில்பட் பாணியில் தாடி வைத்திருந்த பில்லி மோரியா புன்னகைத்தவாறே, “போட்டோ கீட்டோ ஏதும் இல்லை. ஒரு விளம்பரம் வந்திருக்கிறது’’ என்றான். “அது என்ன விளம்பரம்?’’ என்று கேட்டேன். பில்லி மோரியா என்னிடம் இருந்த பத்திரிக்கையைப் பிடுங்கி ஒரு பத்தியைச் சுட்டிக் காட்டினான். “திரு. ஜின்னாவின் கார் கொட்டகைகளையும், அதில் உள்ள வண்டிகளுக்கும் பொறுப்பானதொரு மோட்டார் மெக்கானிக் தேவை’’ அவனுடைய ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதியை பார்த்தேன். பில்லி மோரியாவுக்கு உருது தெரிந்த அளவிற்குதான் எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது என்றாலும், அதில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நான் அந்த நொடியிலேயே படித்துவிட்டது போல், “.....ஓ!’’ என்றேன்.‘நான் முன்னரே சொன்னது போல், என்னுடைய கார் ஓட்டும் திறமை, சாலை நூல் பிடித்தாற் போல் நேராக இருக்கும் பட்சத்தில் அதை நகர்த்துவதற்கு மட்டுமே போதுமானது. கார் எப்படி வேலை செய்கிறது என்று ஏதும் அறியாதவனாகவே இருந்தேன். எனக்குத் தெரிந்தது எல்லாம், வண்டியை உயிர் பெற வைக்கும் பொத்தானை அழுத்தினால், இஞ்சின் இயங்கும். சிலசமயங்களில் அது இயங்க மறுப்பதும் உண்டு. ஆனால், யாரேனும் ஏன் என்று கேட்டால், மனிதனுடைய அறிவிற்கு அப்பாற்பட்ட, மாற்றமுடியாத மோட்டார்வண்டி விதிகளில் ஒன்று என்று தான் நான் பதில் தந்திருப்பேன். விளம்பரத்தில் என்ன விலாசம் இருக்கிறது என்று பில்லி மோரியாவிடம் கேட்டு அதை மனப்பாடம் செய்து கொண்டேன். வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லை என்றாலும், அவரை மறுபடியும் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அடுத்த நாள் காலையில் காயிதே அஸாம் இல்லத்திற்குப் போவது என்று முடிவெடுத்தேன்.என்னுடைய கரங்களில் நான் வைத்திருந்த ஒரே தகுதி, காயிதே மீது நான் கொண்டிருந்த பற்று மட்டும் தான். மலபார் ஹில்லில், மௌண்ட் பிளசன்ட் வீதியில் இருந்த அவருடைய இல்லத்தை அடைந்தேன். பிரம்மாண்டமான பங்களாவிற்கு வெளியே பெரிய அளவில் தைக்கப்பட்ட அப்பழுக்கற்ற வெள்ளை சல்வாரும், மிகச் சரியாகக் கட்டப்பட்டிருந்த பட்டு டர்பனும் அணிந்திருந்த ஒரு பட்டான் காவல்காரனும் நின்று கொண்டிருந்தான். எனக்கு ரொம்பவும் சந்தோசமாய் இருந்தது. அங்கே திடகாத்திரமாக இன்னொருவனும் இருக்கிறான். மனதிற்குள்ளே அவனை என்னோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்களுக்கிடையே ஏதேனும் வித்தியாசம் இருந்தாலும், அது மிக சொற்பமானதுதான் என்று நிம்மதியடைந்தேன்.அங்கு ஏற்கனவே நம்பிக்கையோடு வந்திருந்த எல்லோரிடமும், இந்த வேலைக்கான தகுதி அவர்களிடம் இருக்கிறது என்று நிரூபிக்கச் சான்றிதழ்கள் இருந்தன. நான் அமைதியாக அவர்களோடு சேர்ந்து கொண்டேன். வண்டி ஓட்டுவதற்கான அனுமதியைக் கூட நான் பெற்றிருக்கவில்லை என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும். காயிதே அஸாமை மீண்டும் ஒரே ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு காத்திருந்தேன். எந்த நிமிடத்திலும் அங்கு வரலாம் என்று எதிர்பார்ப்போடு இருந்தேன். திடீரென்று அவர் முன் வாசலுக்கு வெளியே இருந்தார். எல்லோரும் இறுக்கமான நிலைக்கு வர, நான் ஒரு பக்கமாய் என்னை மறைத்துக்கொண்டேன். அவருக்கு அடுத்தாற் போல் மிக உயரமாகவும், நேர்த்தியாகவும் அவருடைய சகோதரி பாத்திமா நின்று கொண்டிருந்தார். பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் பலமுறை அவருடைய படத்தைப் பார்த்திருக்கிறேன். காயிதேயிடமிருந்து சில அடிகள் தள்ளி மரியாதையோடு நின்று கொண்டிருந்தவர், அவருடைய காரியதரிசி மட்லூப் சாகிப் (மட்லூப் ஹூசைன் சையத்)காயிதே அவருடைய ஒற்றைக்கண் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு வேலைக்காக வந்திருந்த ஒவ்வொருவரையும் மிகக் கவனமாக அளந்தெடுத்தார். ஒற்றைக் கண் கண்ணாடி அணிந்திருந்த அந்தக் கண்கள், என் மீது நிலைத்து நின்றது. நான் மேலும் சுருங்கிப்போனேன். பிறகு ஊடுருவக்கூடிய அவருடைய குரல், “யூ...’’ என்று சொல்வதைக் கேட்டேன். அந்த அளவிற்கு ஆங்கிலத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் யார் அந்த ‘யூ?’ எனக்கு அடுத்தாற்போல் நின்று கொண்டிருந்தவன் தான் என்று தீர்மானமாக இருந்ததால், என்னுடைய முழங்கையால் அவனை இடித்து, “அவர் உன்னைத்தான் அழைக்கிறார்’’ என்றேன். என்னுடைய கூட்டாளி திக்கித் திக்கி, ‘சாகிப், நானா?’ என்று கேட்டான். மீண்டும் எழுந்த காயிதே அஸாமின் குரல் “நோ... யூ’’ என்றது. அவருடைய மெலிந்த, ஆனால் இரும்பு போன்ற விரல் என்னைக் குறிபார்த்து இருந்தது.நான் நடுங்கத் தொடங்கினேன். ‘சார், நானா?’ ‘ஆமாம்’ என்று பதில் தந்தார். அவருடைய இந்த ஒரு வார்த்தை ராயல் என்பீல்ட் 303 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா போல் என்னுள் பாய்ந்து சென்றது. காயிதேக்காக எவ்வளவோ கோஷங்கள் எழுப்பிய இந்தத் தொண்டை இப்போது முற்றிலும் வறண்டு கிடந்தது. என்னால் பேசமுடியவில்லை. அவர் ஒற்றைக்கண் கண்ணாடியை எடுத்துவிட்டு, “ஆல்ரைட்’’ என்றார். நான் எவ்வாறு உணர்கிறேன் என்பதை எப்படியோ அவர் உணர்ந்து கொண்டதைப் போலவும், என் அவஸ்தைகளை ஓர் முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும், ‘ஆல்ரைட்’ என்று சொன்னது போல் தான் எனக்குத் தெரிந்தது. அவர் திரும்பி, இளமையாகவும் அழகாகவும் இருந்த அவருடைய காரியதர்சியைப் பார்த்து ஏதோ சொல்லிவிட்டு, அவருடைய சகோதரியோடு வீட்டிற்குள் சென்றார். நான் அங்கிருந்து ஓடி விட எத்தனித்த போது, மட்லூப் பேசினார்: ‘சாகிப் நாளை காலை பத்து மணிக்கு நீ இங்கு ஆஜராக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்’ என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்றும் என்னால் கேட்க முடியவில்லை, காயிதே அஸாம் விளம்பரம் கொடுத்த வேலைக்கான தகுதி ஏதும் என்னிடம் இல்லை என்றும் என்னால் சொல்ல முடியவில்லை. பிறகு மட்லூப் சாகிப் வீட்டிற்குள் திரும்பிப்போக, நானும் வீடு திரும்பினேன்.அடுத்த நாள் காலை மிகச்சரியான நேரத்தில் அவருடைய இல்லத்தில் ஆஜரானேன். காயிதேவின் காரியதரிசி, சாகிப்புக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்றும், நான் உடனடியாகக் கார் கொட்டகைக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு ஏதும் தெரியாது என்றும், காயிதே அஸாம் ஏமாற்றப்பட்டார் என்றும் நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய முதல் எண்ணமாக இருந்தது. நான் வெறுமனேதான் வந்தேன் என்றும், எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதையையும் ஒப்புக்கொள்ளாமல் ஏன் மௌனமாக இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. கார் கொட்டகையின் சாவிக் கொத்து என்னிடம் கொடுக்கப்பட்டு காயிதேயின் நான்கு கார்களுக்கு நான் பொறுப்பாளனானேன். அவ்வப்போது நான் ஓட்டிய ஒரே வண்டி சேத் அர்தேஷிர் இரானியுடைய பைக் மட்டுமே, அதுவும் நேரான சாலைகளில் மட்டும். ஆனால் மௌண்ட் பிளசன்ட் தலைசுற்றும் வளைவுகளையும் திருப்பங்களையும் கொண்டது. லட்சக்கணக்கான முசல்மான்களின் வாழ்க்கை, எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறதோ, அவரைப் பாவம் இந்த அசாத் ஓட்டிச்செல்ல வேண்டும் - அதுவும் மிகவும் ஆபத்தான வளைவுகளில், வேறு எங்கெல்லாம் என்று, கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.சாவிக்கொத்தை அப்படியே தரையில் போட்டுவிட்டு, நேராக வீட்டுக்கு ஓடி என் பொருட்களையெல்லாம் சுட்டிக்கொண்டு, டெல்லிக்குப் போகும் ரயில் வண்டியில் ஏறிவிடவேண்டும் என்ற எண்ணம் தான் என்னுள் இருந்தது. ஆனால் அது சரியல்ல என்றே நினைத்தேன். ஜின்னா சாகிப்பிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டு, அவருடைய மன்னிப்பை வேண்டி, நான் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன், ஆனால் என்னை நம்பு, ஆறு மாதங்களுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவே இல்லை’’.“எப்படி?’’ என்று முகமத் ஹனிஃப் அஸாத்திடம் கேட்டேன்.“அது அப்படித்தான்’’ என்று சொல்லி விளக்கம் கொடுத்தான். “நான் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, முன் வாசலுக்கு வெளியே காரைக் கொண்டு வந்து நிறுத்தி காத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் ஏறக்குறைய மயங்கி விழுந்தேன் என்றாலும், காயிதே தோன்றியவுடன், அவருக்கு சல்யூட் அடித்து கார் கொட்டகையின் சாவிகளை அவரிடம் கொடுத்துவிட்டு அவருடைய காலில் விழுந்துவிடவேண்டும் என்று தீர்மானித்து என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் முன் வாசலில் நுழைந்த அந்த கணத்தில் நான் ஊமையாகிவிட, என்னால் ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியவில்லை. அவருடைய சகோதரி பாத்திமா சாகிபாவும் அவரோடு இருந்தார். மண்ட்டோ சாகிப், ஒரு பெண்ணின் முன்னிலையில் எப்படி நம்மால் வேறொருத்தர் காலில் விழ முடியும்? எப்படியிருந்தாலும் அது சரியாக இருந்திராது. ஆக மண்ட்டோ சாகிப், புத்தம் புது பேக்கார்ட் வண்டியை நான் கிளப்ப வேண்டியதாயிற்று. நான் மௌனமாகக் கடவுளை வேண்டியபடியே, எந்தப் பிரச்னையும் இல்லாமல் முன்கதவு வழியே தெருவுக்கு வந்துவிட்டேன். மௌண்ட் பிளசன்ட் வளைவுகளை நல்ல முறையில் தான் கையாண்டு வந்தேன் என்றாலும், பிரதான சாலையில் இருந்த சிவப்பு விளக்கு நிறுத்தத்தில், நான் சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.என்னுடைய ஆசான் புதான் மிக மென்மையாக வண்டியை நிறுத்தவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தான், என்றாலும் நான் பயந்துக் கிடந்ததால் வெடுக்கென்று பிரேக்கை அழுத்த, வண்டி தூக்கிப்போடப்பட்டது போல் நிற்க, காயிதே பிடித்துக்கொண்டிருந்த சுருட்டு அவருடைய விரல்களில் இருந்து நழுவி கீழே விழுந்தது. பாத்திமா சாகிபா ஏறக்குறைய அவருடைய இருக்கையில் இருந்து தூக்கியடிக்கப்பட, அவர் என்னைச் சபிக்கத் தொடங்கினார். நான் இறந்து விடுவேன் என்றுதான் நினைத்தேன். என் கைகள் நடுங்கத் தொடங்கியது. தலை சுற்றுவது போல் உணர்ந்தேன். காயிதே அஸாம் சுருட்டைத் தரையிலிருந்து எடுத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார். வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று அவர் சொன்னதாக நான் நினைத்துக் கொண்டேன். நாங்கள் திரும்பியவுடன், அவர் வேறொரு வண்டியும் வேறொரு காரோட்டியும் கேட்டுக் கிளம்பிச் சென்றார். அவருக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அடுத்த ஆறு மாதங்கள் வரை எனக்குக் கிடைக்கவே இல்லை.’’“இதே போலத்தான் மறுபடியும் சேவை செய்தாயா?’’ என்று புன்கைத்தவாறே கேட்டேன்.அசாத்தும் புன்கைத்தான். “விசயம் என்னவென்றால் இத்தனை நாட்களும் சாகிப் என்னை உபயோகிக்க முயற்சி செய்யவேயில்லை. அங்கு இருந்த மற்ற காரோட்டிகளைத்தான் உபயோகித்தார். அவர்கள் எல்லோரும் சாகிப்பின் பணியாளர் அடையாளத்தை அணிந்திருந்தார்கள். அது மிக அழகாக இருக்கும். அடுத்த நாள் யார் கார் ஓட்ட வேண்டும் என்றும், எந்த வண்டியை எடுக்க வேண்டும் என்றும் முந்திய இரவே மட்லூப் சாகிப் எங்களிடம் தெரிவித்து விடுவார். அவ்வப்போது என்னைப்பற்றி அவரிடம் கேட்பேன் என்றாலும், அவர் ஏதும் சொல்லமாட்டார். உண்மை என்னவென்றால், சாகிப் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று யாராலும் தீர்மானமாய்ச் சொல்ல முடியாது. அவரிடம் துணிச்சலாகக் கேட்கவும் முடியாது. விசயத்தைச் சுற்றி வளைத்துப் பேசும் தன்மை அவரிடம் கிடையாது. அவசியமாக இருந்தால் மட்டுமே காது கொடுத்துக் கேட்கக்கூடிய அவர், அவசியமாக இருந்தால் மட்டுமே பேசக் கூடியவர். அதனாலேயே தான் காயிதேவுக்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும், பயன்படுத்தப்படாத உதிரி பாகம் போல் என்னை ஏன் கொட்டகைக்குள் தள்ளி வைத்தார் என்று என்னால் தெரிந்து கொள்ளவே முடியவில்லை’’நான் என் யூகத்தை வெளிப்படுத்தினேன். “அவர் உன்னை முழுவதுமாக மறந்திருக்கலாம்’’. அசாத் உரக்கச் சிரித்தான். “இல்லை ஐயா, சாகிப் மறந்திருப்பதற்கான சாத்தியமே இல்லை, அவர் எதையும் மறக்கக்கூடியவரும் இல்லை. ஒரு சிறு வேலையும் செய்யாமல் அசாத் ஆறு மாதமாக விருந்து உண்டு கொண்டிருக்கிறான் என்று அவருக்கு மிக நன்றாகத் தெரிந்துதான் இருந்தது. அதுவும் மண்ட்டோ சாகிப், அசாத் சாப்பிட உட்கார்ந்தால் அவனை சந்தோசப்படுத்துவது அவ்வளவு சுலபமில்லை. என்னையும் என்னுடைய இந்தப் பெரிய உடம்பையும் சற்றுப் பாருங்கள்’’நான் அவனைப் பார்த்தேன். உண்மையில் திடமான மிகப்பெரிய உடம்பை கொண்டவன் தான். 1937 அல்லது 38ல் அவன் எப்படி இருந்திருப்பான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஒரு சமயம் காயிதேயின் காரோட்டியாக இருந்தான் என்று தெரிந்து கொண்டது முதல், அவனிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அவனைப் பலமுறை சந்தித்து, காயிதேவுடன் அவன் கழித்த நாட்களைப் பற்றிக் கேட்க வேண்டியிருந்தது. நான் இதை எழுதத் தொடங்கிய சமயத்தில், கவிஞர் அல்லாமா முகமது இக்பாலுக்கு உயரமான மனிதர்கள் என்றால் பிடித்திருந்ததைப்போல், காயிதே அஸாம் திடகாத்திரத்தை விரும்பினார் என்று என்னுள் தோன்றியது. பலம் - காயிதேவிடம் வேலை பார்த்த எல்லோருமே இந்த தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அசாத் இருந்த சமயத்தில், காயிதேவிற்கு வேலை பார்த்தவர்கள் எல்லோரும் பார்ப்பதற்கு அழகாகவும் திடமானவர்களாவும் இருந்தார்கள். அவருடைய காரியதரிசி மட்லூம் அழகாகவும் திடமான உடலைக் கொண்டவராகவும் இருந்தது போலத் தான், அவருடைய வண்டி ஓட்டுநர்களும் காவல்காரர்களும் இருந்தார்கள்.திரு. ஜின்னா உடல் ரீதியாக பலவீனமானவராக இருந்தாலும், இரும்புப் போல் திடமான மனதைக் கொண்டவர். பலவீனமானவர்களோடு எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ள அவர் விரும்பாததை, நாம் உளவியல் ரீதியாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். எவர் ஒருவரும் தாம் நேசிப்பதை மிகவும் அக்கறையோடு பாத்துக்கொள்வார்கள். காயிதேவும் இதில் வேறுபட்டவர் அல்ல அவருக்கான வேலை பார்ப்பவர்கள், மிக நேர்த்தியாக வேலைக்கு வரவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். பட்டான் காவலாளி, எப்போதும் அவனுடைய பாரம்பரிய உடையில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அசாத் பஞ்சாபியில்லை என்றாலும், ஒரு ஆணை உயரமாகவும், கம்பீரமாகவும் வெளிப்படுத்தக் கூடிய அந்தத் தலைப்பாகையை அணிய வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்பட்டதும் உண்டு. அவன் தலைப்பாகையை ஒழுங்காகவும் அழகாகவும் கட்டியிருந்தால், சில சமயங்களில் அன்பளிப்பாகக் காசு பெறுவதற்கு சாத்தியமும் இருந்தது.இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும்போது, காயிதே அசாமின் திடமான மனதின் ரகசியம் அவருடைய உடல்ரீதியான குறையை அடிப்படையாகக் கொண்டதுதான் என்றே தோன்றுகிறது. வலுவற்ற உடல் பலவீனத்தை அவர் எப்போதும் பிரதிபலித்தது. காயிதே அஸாம் மிகக் குறைவாகவே உணவு உட்கொள்ளக்கூடியவர் என்று அசாத் என்னிடம் தெரிவித்தான். “அவர் அத்தனை குறைவாக உண்பதைப் பார்க்கும் போது, எது அவரை உயிரோடு வைத்திருக்கிறது என்று நான் வியந்தது. உண்டு. ஒரு வேளை நானும் அது போல் மிகக் குறைந்த அளவே உணவு உட்கொள்ள வேண்டியிருந்தால், ஒரு சில நாட்களில் கரைந்து காணாமல் போய்விடுவேன். ஒவ்வொரு நாளும் சமையல் அறையில் நான்கைந்து கோழிகள் சமைக்கப்படும் என்றாலும், ஜின்னா சாகிப் உட்கொள்ளுவது எல்லாம் ஒரு பெரிய கிண்ணத்தில் சூப் மட்டுமே. ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய அளவில் புத்தம் புதிய பழ வகைகள் அவருடைய வீட்டிற்கு வந்தாலும், அதை அவர் எப்போதும் உட்கொண்டதே கிடையாது. எல்லாமே வேலைக்காரர்கள் வயிற்றுக்குள் தான் சென்றது. ஒவ்வொரு நாளும் படுக்கப் போவதற்கு முன் அடுத்த நாள் என்ன என்ன சமைக்கப்படவேண்டும் என்று ஒரு பட்டியலில் இருந்து சொல்வார். பொருட்கள் வாங்குவதற்கு என்னிடம் நூறு ரூபாய் நோட்டு கொடுக்கப்படும்’’“ஒவ்வொரு நாளும் நூறு ரூபாயா?’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டேன்.“ஆமாம் ஐயா, நூறு ரூபாய் தான். காயிதே அஸாம் அதற்கான கணக்கை எப்போதும் கேட்டதே கிடையாது. மிச்சப்பணத்தை எல்லாம் வேலை பார்க்கும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். சில நாட்களில் அது முப்பது ரூபாயாக இருக்கும். வேறு சில நாட்களில் நாற்பது. ஏன் சில சமயங்களில் அறுபது எழுபதாகக் கூட இருக்கும். நிச்சயமாக இதைப் பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் எப்போதும் கணக்குக் கேட்டதே கிடையாது. ஆனால் மிஸ். ஜின்னா வேறு மாதிரியானவர். பொருட்களுக்குச் கொடுக்கும் விலையைக் காட்டிலும் அதிகமாகக் கணக்கு கொடுக்கிறோம் என்றும், நாங்கள் எல்லோரும் திருடர்கள் என்றும் அடிக்கடி சொல்வர். அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்போம். ஏனெனில் இது போன்ற விசயங்களில் சாகிப் அக்கறை காட்டுவதில்லை என்று எங்களுக்குத் தெரியும். அத்தகைய சமயங்களில் அவருடைய சகோதரியிடம் “இடஸ் ஆல்ரைட்... இடஸ் ஆல்ரைட்...’’ என்பார்.இருந்தாலும் ஒரு சமயத்தில், அது “ஆல்ரைட்டாக’’ மாற முடியாமல் போக, மிஸ். ஜின்னா சமையற்காரர்கள் இருவரை வேலையை விட்டு வெளியேற்றும் அளவிற்கு அவர்கள் மீது கோபம் கொண்டார். அதில் ஒருவன் பிரத்தியேகமாக ஐரோப்பிய உணவுகள் சமைப்பதற்காகவே இருக்க, மற்றொருவன் இந்திய உணவுகளுக்குப் பொறுப்பாளனாக இருந்தான். பின்னவன் எப்போதும் வேலை எதுவும் இல்லாமல் இருப்பான் - சில சமயங்களில் மாதக் கணக்கில்கூட. ஆனால் அவனுடைய முறை வரும்போது சுறுசுறுப்பாகக் காரியத்தில் குதிப்பான். காயிதே அஸாம் உண்மையில் இந்திய உணவுகளைப் பெரிதாக விரும்பியது கிடையாது. இருந்தாலும் அவருடைய சகோதரி விஷயங்களில் அவர் எப்போதும் தலையிடாததால், இரண்டு சமையல்காரர்களும் வேலையை விட்டு நீக்கப்பட்ட போது அமைதியாகவே இருந்தார். உணவு உண்பதற்காக அவர்கள் இருவரும் பல நாட்கள் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று வந்தார்கள். எங்களைப் பொறுத்தவரை இதனால் நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். புது சமையல்காரர்களைத் தேடுகிறோம் என்று நாங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு, சௌகரியமாக நகர வீதிகளில் வெறுமனே சுற்றிவிட்டு, வேலைக்குத் தகுதியான ஆட்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று திரும்பி வந்தவுடன் எங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்போம். இறுதியில் மிஸ். ஜின்னா அந்த இரண்டு பழைய சமையல்காரர்களையே திரும்ப வருமாறு அழைத்தார்.மிகக் குறைவாக சாப்பிடுபவர்கள், அவர்களைக் காட்டிலும் மிக அதிகம் சாப்பிடுவர்களைப் பார்த்து ஒன்று பொறாமைப் படுவார்கள் அல்லது அவர்கள் சிறப்பாகச் சாப்பிடுவதைப் பார்த்துச் சந்தோசப்படுவார்கள். காயிதே இரண்டாவது வகையைச் சேர்ந்த குறைவாகச் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அதனால் தான் மளிகைப் பொருட்களும் இறைச்சியும் வாங்கியது போக வெளிப்படையாக தெரியக்கூடிய மிச்சப்பணத்தை நாங்கள் என்ன செய்தோம் என்று அவர் எப்போதும் கேட்டதே கிடையாது. நான் உன்னிடம் ஒரு கதை சொல்கிறேன். அது 1939ம் வருடம் கடல் அலைகள் உற்சாகமாய்க் கரை மீது மோதிக்கொண்டிருக்க, நான் காயிதேவை அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியில் மேரின் டிரைவில் மிக மென்மையாக ஓட்டிக்கொண்டிருந்தேன். காற்றில் சற்றே சில்லிட்ட தன்மை இருந்தது. ஜின்னா சாகிப் மிக நல்ல மனநிலையில் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகும் ஈத் பண்டிகையைப் பற்றிச் சொல்வதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தேன்.பின் பகுதியைப் பார்க்கக்கூடிய கண்ணாடியில், அவரைப்பார்க்க முடிந்தது. அவருடைய உதட்டில் மிக மெல்லிய புன்னகை தோன்றியது. நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அவர் எப்போதும் பிடித்துக் கொண்டிருக்கும் சிகார் அவருடைய உதடுகளுக்கு இடையில் இருந்தது. இறுதியாக அவர், “நல்லது, நல்லது நீ திடீரென்று ஏன் முசல்மானாக மாறிவிட்டாய்... கொஞ்சநாட்களுக்கு கொஞ்சம் போல் இந்துவாக இருப்பதற்கு முயற்சி செய்’’ என்று பேசினார். நான்கு நாட்களுக்கு முன்னர்தான் காயிதே எனக்கு இருநூறு ரூபாய் நோட்டை அன்பளிப்பாகக், கொடுத்து என்னுள் இருந்த முசல்மானைச் சந்தோசப்படுத்தினார். மேலும் பணம் கேட்க நினைத்ததால், நான் இந்துயிசத்தைச் சற்றே தழுவிச் கொள்ளுமாறு இப்போது அறிவுரை கொடுக்கிறார்.காயிதே அஸாமின் அந்தரங்க வாழ்க்கை எப்போதும் மர்மமாகவே இருந்தது. அப்படியே தான் எப்போதும் இருக்கும். அவருடைய எல்லா நேரங்களும் அரசியலுக்காகக் கொடுக்கப்பட்டதால், அவருக்கு என்று அந்தரங்க வாழ்க்கை என்பது ஏறக்குறைய கிடையாது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு அவர் மனைவியை இழந்ததோடு, அவருடைய மகளும் அவரின் விருப்பத்திற்கு எதிராக ஒரு பார்சியைத் திருமணம் செய்து கொண்டார்.“சாகிப்புக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த நிறத்தில் இருந்தாலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவள் ஒரு முசல்மானைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவருடைய மகள் அவரோடு விவாதம் செய்தாள். அவரே, மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் அவருடைய சுதந்திரத்தை நிலைநாட்டியிருக்க, அதே சுதந்திரத்தை அவளுக்குக் கொடுக்க அவர் ஏன் மறுக்கிறார் என்று அவள் கேட்டாள்’’ என்றான் அசாத்.மிகப் பிரபலமான பம்பாய் பார்சி ஒருவருடைய மகளை காயிதே அஸாம் திருமணம் செய்து கொண்டது, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் கோபம் கொள்ள வைக்க அதற்குப் பழிவாங்கவேண்டும் என்று இருந்திருந்தார்கள். காயிதே மகளுக்கு ஒரு பார்சி உடனான திருமணம் என்பது சிந்தித்துச் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் என்று சிலர் சொன்னார்கள். நான் இதை அசாத்திடம் தெரிவித்த போது அவன், “கடவுளுக்குத் தான் எல்லாம் தெரியும். ஆனால் எனக்குத் தெரிந்தது எல்லாம், அவருடைய மனைவியின் மறைவிற்குப் பிறகு இது தான் காயிதே அஸாமை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்தது. இந்தத் திருமணம் பற்றிய செய்தியை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய முகத்தில் இருந்த சோகத்தைப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில் அவர் மிகவும் வெளிப்படையானவர். அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும். எளிதில் புண்படக்கூடிய அவரை ஒரு சாதாரண நிகழ்ச்சி கூட பெரிய அளவில் இம்சைப்படுத்தும். அவருடைய புருவங்கள் விரிவதை வைத்தே அவர் கோபமாக இருக்கிறாரா அல்லது குழப்பத்தில் இருக்கிறாரா என்று சொல்லிவிட முடியும். அவரது துக்கத்தை அவரால் மட்டுமே அளக்க முடியும் என்றாலும், அந்த நாட்களில் அவரைப் பார்த்தவர்கள் எவ்வளவு நிலைகுலைந்து இருந்தார் என்று உணர்ந்திருப்பார்கள். இரண்டு வாரங்களுக்கு, அவரைப் பார்க்க வந்தவர்கள் எவரையும் அவர் சந்திக்கவில்லை. சிகார் பிடித்துக்கொண்டு, வெறுமனே அறையில் மேலும் கீழும் நடந்து கொண்டே இருந்தார். அந்த இரண்டு வாரங்களில் அவர் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்திருக்க வேண்டும்.’’அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால், எப்போதும் தன்னந்தனியே, பின்னிரவில் மிகச் சுத்தமான அவரது அறையில் அளந்தெடுத்தாற்போல் அடி வைத்து, மேலும் கீழும் நடந்து கொண்டேயிருப்பார். அவருடைய பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ இருக்கும், கனத்த தோல் செருப்பு தாள சுதியோடு சப்தம் எழுப்ப, அந்த இரவுகள் நகர்ந்து கொண்டிருக்கும். அது கடிகார துடிப்புப் போல் இருக்கும். காயிதே அஸாம் அவருடைய காலணிகளை மிகவும் விரும்புவார். அதற்குக் காரணம் அது எப்போதும் அவருடைய காலடியிலேயே இருப்பதாலும், அவர் விருப்பப்படுவது போல் மிகச்சரியாக செயல்படக்கூடியது என்பதினாலும் தானா?இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வெளியே வந்தார். அவருடைய முகத்தில் துக்கத்திற்கான அறிகுறிகளையோ மன அழுத்தத்திற்கான அறிகுறிகளையோ காணமுடியவில்லை. இரண்டு வாரங்களாக தாழ்ந்திருந்த அவருடைய தலை இப்போது மீண்டும் நிமிர்ந்து இருந்தது. ஆனால் இதற்கு நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்றோ, அந்த அதிர்ச்சியிலிருந்து தேறிவந்துவிட்டார் என்றோ அர்த்தம் இல்லை.அசாத்துக்கு இது எப்படி தெரியும் என்று கேட்டேன். “பணியாளர்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படுவதில்லை’’ என்று பதில் தந்தான். “சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழைய இரும்புப் பெட்டியை அவரது அறைக்கு எடுத்து வந்து அதன் பூட்டைத் திறக்கச் சொல்வார். அது முழுக்க இறந்து போன அவருடைய மனைவி மற்றும் பிடிவாத குணம் கொண்ட அவருடைய மகள் சிறு குழந்தையாய் இருந்தபோது அணிந்திருந்த துணிமணிகளால் நிரம்பி இருக்கும். அந்தத் துணிமணிகள் வெளியே எடுக்கப்பட, ஒரு வார்த்தையும் பேசாமல் அதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார். ஓட்டிப்போய் இருக்கும் அவருடைய முகம் கருத்துப் போகும். “இட்ஸ் ஆல்ரைட் இட்ஸ் ஆல்ரைட்’’ என்று சொல்லி, ஒற்றைக்கண் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்வார்.காயிதேவுக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள். பாத்திமா, ரெஹ்மத், மற்றும் மூன்றாவது சாகோதரியின் பெயர் என் நினைவில் இல்லை. அவள் டோங்கிரியில் வசித்து வந்தாள். ரெஹ்மத் ஜின்னா ‘சினாய் மோட்டர்ஸ்’ அருகில் இருந்த சௌபாத்தி கார்னரில் வசித்து வந்தார். அவருடைய கணவர் எங்கோ வேலை பார்த்து வந்தாலும் பெரிதாக வருமானம் ஏதும் இல்லை. சாகிப் ஒவ்வொரு மாதமும் சீல் வைக்கப்பட்ட உறையை என்னிடம் கொடுப்பார் - அதில் பணம் இருக்கும். சில சமயங்களில் பெரிய பொட்டலத்தைக் கொடுப்பார் - அதில் துணிமணிகள் இருந்திருக்கலாம். நான் இதை ரெஹ்மத் ஜின்னாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வப்போது சாகிப்பும் மிஸ். ஜின்னாவும் அவரைப் போய் பார்த்து வருவார்கள். டோங்கரியில் இருந்த அவருடைய மற்றொரு சகோதரியும் திருமணமானவர்தான். எனக்குத் தெரிந்தமட்டில் அவர் மிக நல்ல நிலையில் இருந்ததால் அவருக்குப் பொருளாதார உதவிகள் ஏதும் தேவைப்படவில்லை. காயிதேவுக்கு ஒரு சகோதரனும் இருந்தான், அவனுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருந்தாலும், அவருடைய வீட்டிற்கு வர மட்டும் அவனுக்கு அனுமதி கிடையாது.ஒரு முறை நான் அவனைப் பம்பாயில் பார்த்தேன். சவாய் பாரில் தான், பார்ப்பதற்குக் காயிதே போலவே இருந்த அவன், அப்போதுதான் சிறு அளவு ரம் சொல்லியிருந்தான். அதே மூக்கு, அதே முக அமைப்பு, அதேபோல் வாரியிருந்த தலைமுடி அதே போல் நடுவில் நரைத்தமுடி. நான் எவரோ ஒருவனிடம் அந்த மனிதர் யார் என்று கேட்ட போது, அவன் தான் திரு.முகமது அலி ஜின்னாவின் சகோதரன் அகமது அலி என்று சொல்லப்பட்டது. நான் நீண்ட நேரம் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ரம்மை மிக மெதுவாகக் குடித்தபின் பணம் கொடுத்தான் - அது ஒரு ரூபாய்க்கும் குறைவானதுதான் என்றாலும், ஏதோ பெரிய தொகையைக் கொடுப்பது போல் ஆடம்பரமாகக் கொடுத்தான். அவன் அங்கு உட்கார்ந்திருந்த விதம் மூன்றாம் தர பம்பாய் மதுக்கடையில் தான் என்பது போல் அல்லாமல், தாஜ் மஹால் ஹோட்டலிலேயே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி - ஜின்னா பேச்சுவார்த்தைக்கு முன்னர் அதே அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற பம்பாய் முசல்மான்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் என்னுடைய நண்பன் ஒருவனும் கலந்து கொண்டான். காயிதே அஸாம் அவருக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய சகோதாரன் அகமத் அலி கூட்டத்திற்குப் பின்னால் ஒற்றைக்கண் கண்ணாடி அணிந்து கொண்டு நின்றபடியே, ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததாக என்னிடம் தெரிவித்தான்.வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுகளில் காயிதே அசாமுக்கு பிடித்தது பில்லியாட்ஸ் மட்டுமே. விளையாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றும் போதெல்லாம் பில்லியர்ட்ஸ் அறையைத் திறக்கச் சொல்லி உத்தரவிடுவார். ஒவ்வொரு நாளும் அந்த அறை தூசுகள் தட்டப்பட்டு மிகச் சுத்தமாகத் தான் இருக்கும் என்றாலும், பணியாளர்கள் அத்தகைய நாட்களில் மேலும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள். அந்த விளையாட்டில் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால், பில்லியர்ட்ஸ் அறையில் நுழைவதற்கு நான் அனுமதிக்கப்படுவேன். பன்னிரெண்டு பந்துகள் சாகிப் முன்பே வைக்கப்பட, அதில் மிகக் கவனமாக மூன்றைத் தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்குவார். பல சமயங்களில் மிஸ். ஜின்னாவும் அங்கிருப்பார். சாகிப் தன் உதடுகளுக்கிடையே சிகாரை வைத்துக்கொண்டு, அவர் தாக்கப்போகும் பந்தின் நிலையை உள்வாங்கிக் கொள்வார். பல கோணங்களில் இருந்து அதை ஆராய வேண்டியிருப்பதால் அதற்குப் பல நிமிடங்கள் ஆகும். அவர் கையில் பிடித்திருக்கும் கோலின் கனத்தைப் பரிசோதிப்பது போலவும், ஏதோ தந்தி வாத்தியத்தை வாசிக்க வில்லைப் பிடித்திருப்பது போலும், அவருடைய மெலிந்த நீளமான விரல்களுக்கு இடையே அதை மேலும் கீழும் நகர்த்திக் குறிபார்த்து அடிக்கப்போகும் அந்தத் தருணத்தில் அதை விட மேலும் சிறப்பான கோணம் ஏதோ ஒன்று தோன்றியதால் ஆட்டத்தை நிறுத்திவிடுவார். அவருடைய ஆட்டம் மிகச் சரியானது தான் என்று முழுமையான திருப்தி ஏற்பட்ட பிறகே விளையாடுவார். அவர் திட்டமிட்டது போல் ஆட்டம் நிகழ்ந்து விட்டால், அவருடைய சகோதரியைப் பார்த்து பெருமிதத்தோடு புன்னகைப்பார்.அரசியலிலும், காயிதே அஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார். அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே அறிந்து தான் இருந்தார்.அசாத் சொன்னதில் அடிப்படையில், காயிதே அஸாம் வீண் பேச்சுகள் பேசுவதை வெறுத்தவர் என்பதால், வெறுமனே அவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை முற்றிலுமாக தவிர்த்தார். சுருக்கமான தேவையான உரையாடல்களுக்கு மட்டுமே அவருடைய காதுகள் இருந்தன. அவரைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும் அந்தப் பிரத்தியேக அறையில், ஒரே ஒரு சிறிய சோபாவும் அதற்கு அருகில் ஒரு சிறிய மோடா மட்டுமே இருந்தன. அந்த மோடாவில் இருந்த சாம்பல் கிண்ணத்தில், அவருடைய சிகார் சாம்பலைத் தட்டிவிடுவார். எதிரே இருந்த சுவருக்கு முன் கண்ணாடிக் கதவுகள் கொண்ட இரண்டு அலமாரிகளில் அவருடைய ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்ட புனித குரான் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்களும் அங்குதான் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய பெரும்பாலான நேரம் அந்த அறையில் தான் செலவழிக்கப்பட்டது. எங்களில் யாரேனும் ஒருவர் கூப்பிட்டு அனுப்பப்பட்டால், கதவருகே நின்று கொண்டுதான், அவருடைய உத்தரவுகளைக் கேட்க வேண்டும். பிறகு அங்கிருந்து நகர்ந்து விடவேண்டும். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்கள், சோபாவில் தாறுமாறாய் இறைந்துக் கிடக்கும். ஏதேனும் கடிதம் எழுதவேண்டியிருந்தால் மட்லுப் அல்லது சுருக்கெழுத்து எழுதக்கூடியவருக்கு அவர் சொல்லி அனுப்பி, தீர்மானமான குரலில், அதிகாரத்தோடு அவர் சொல்ல வேண்டியதைச் சொல்வார். என்னுடைய ஆங்கில அறிவு மிகக் குறைவானது தான் என்றாலும் அழுத்தம் தேவைப்படாத வார்த்தைகளுக்கு எல்லாம் அவர் அழுத்தம் கொடுத்ததாகவே நான் எப்போதும் நினைப்பது உண்டு.’’அசாத் குறிப்பிட்ட ‘அதிகாரத்தோடு’ என்பது ஒருவேளை அவருடைய வலுவற்ற உடலைத் தற்காத்துக்கொள்ளும் உள்மன வெளிப்பாடாக இருக்கலாம் அவருடைய வாழ்க்கை ஓடும் தண்ணீரில் குமிழிப்போல் இருந்தாலும், இந்த உலகத்திற்கு பெரும் நீர் சுழற்சி போல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அந்த உடலில் வலு இல்லாதது தான் அத்தனை காலங்களுக்கும் அவரை உயிரோடு வைத்திருக்கிறது. எவ்வித சம்பிரதாயங்களும் இல்லாமல் காயிதே உறவு வைத்திருந்தது அவருடைய மிகச்சிறந்த நண்பரான நவாப் பஹதூர் யார்த் ஜங்குடன் மட்டும் தான் என்று அசாத் சொன்னான். “அவர் அடிக்கடி சாகிப்பைச் சந்திக்க வருவார். இருவரும் அரசியல் மற்றும் முக்கியமான தேசிய விசயங்களை மணிக்கணக்காயப் பேசிக்கொண்டிருப்பார்கள். நவாப்போடு இருக்கும் போது மட்டும் காயிதே முற்றிலும் வேறுபட்ட மனிதராக இருந்தார். மிக அந்நியோனியமான நண்பர் ஒருவரிடம் பேசுவது போல, அவரோடு மட்டுமே பேசுவார். அவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்து நண்பர்கள் போலவே தோன்றினார்கள். இருவரும் அறையில் ஒன்றாக இருக்கும் போது அவர்களின் உரக்கச் சிரிக்கும் சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மக்மூத்பாத் ராஜா சாகிப், ஐ.ஐ.சுந்த்ரிகர், மௌலானா ஸாஹித் ஹ§சைன், நவாப் ஸாதா, லியாகத் அலிகான், நவாப் சர் முகமது இஸ்மாயில், மற்றும் அலி இமாம் போன்றவர்கள் உட்பட மற்றவர்களும் அவரைச் சந்திக்க வருவார்கள். ஆனால் சாகிப் அவர்களை எல்லாம் ஒருவித சம்பிரதாயத்தோடுதான் கையாண்டார். பஹதூர் யார்த் ஜங்கின் வருகையோடு சம்பந்தப்பட்டிருந்த அந்தச் சம்பிரதாயங்கள் அற்ற சுலபமான தன்மை எல்லாம் மற்றவர்கள் வருகையின் போது காணாமல் போய்விடும்’’ லியாகத் அவரைப் பார்க்க அடிக்கடி வருவாரா என்று அசாத்திடம் கேட்டேன்.“ஆமாம்’’ என்று அசாத் பதில் தந்தான். “மிகவும் திறமை பெற்ற அவருடைய மாணவனைப் போல்தான் காயிதே அவரை நடத்தினார். லியாகத் அவர் மீது பெரும் அளவு மரியாதை வைத்து, அவரது கட்டளைகளின் கடைசி வரிகளைக்கூட நிறைவேற்றினார். சில சமயங்களில் அவர் அழைக்கப்படும் போது, உள்ளே போவதற்கு முன் சாகிப் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். நான் எப்போதும் அவருக்குப் பதில் சொல்ல முடிந்ததற்குக் காரணம் காயிதே மோசமான மனநிலையில் இருந்தால் அது எல்லோருக்கும், ஏன் மௌண்ட் பிளசன்ட் சுவர்களுக்குச் கூட தெரிந்திருக்கும். காயிதே அஸாம் அவருக்காக வேலை பார்ப்பவர்கள் மற்றும் பணியாட்களின் நடத்தையிலும், தோற்றத்திலும் ரொம்பவும் குறியாக இருந்தார். சுத்தம் இல்லாத எல்லாவற்றையும் அவர் வெறுத்தார் - மனிதர்களின் நடத்தை உட்பட அவருக்கு மட்லூப்பை ரொம்வும் பிடித்திருந்தது என்றாலும், முஸ்லீம் லீக் பெண் தொண்டரோடு அவர் உறவு வைத்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன், இது போன்ற முறையற்ற நடத்தைகளை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாதவராக அவர் மிகவும் எரிச்சலடைந்தார். மட்லூப் வரவழைக்கப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் காயிதே பிறகு அவரை எப்போது சந்தித்தாலும், பழைய நண்பர் போலவே அவரை நடத்தினார்.ஒரு முறை நான் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தேன். நகரத்திற்குள் சென்று பாரில் பல மணிநேரங்கள் செலவு செய்துவிட்டு திரும்பி வந்தேன். நான் எவ்வளவு தாமதமாக வந்தேன் என்று சாகிப்புக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு. அடுத்த நாள் என்னை அழைத்து நான் என் நடத்தையைப் பாழ்படுத்திக் கொள்வதாக ஆங்கிலத்தில் தெரிவித்தார். பிறகு அரைகுறை உருதுவில், “இப்போது உனக்குத் திருமணம் செய்து வைத்தாக வேண்டும்’’ என்று சொன்னார். நான்கு மாதங்கள் கழித்து முஸ்லீம் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் பம்பாயில் இருந்து டெல்லிக்கு வந்த போது அவர் விருப்பப்பட்டது போலவே உரிய காலத்தில் நான் திருமணம் செய்து கொண்டேன். அவரோடு எனக்குத் தொடர்பு இருந்ததினால் மட்டுமே, சையத் குடும்பத்தில் இருந்து வந்தவள் எனக்கு மனைவியாக முடிந்தது. நான் ஷேக் ஜாதியைச் சேர்ந்தவன் என்றாலும் சையது குடும்பத்தினர் என்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளக் காரணம் நான் காயிதே அஸாமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்ததனால்தான்...’’காயிதே அஸாம் எப்போதாவது ‘என்னை மன்னித்துக்கொள்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறானா என்று அசாத்திடம் கேட்டேன். அசாத் தலையை ஆட்டினான், “இல்லை. அவரது உதடுகளில் இருந்து தப்பித் தவறியேனும் அந்த வார்த்தைகள் மட்டும் வெளியேறியிருக்கும் பட்சத்தில், அதை அகராதியில் இருந்தே வெட்டியெறிந்திருப்பார் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்’’ என்றான். இந்த ஓர் குறிப்பு ஒன்றே காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் இயல்பின், திறவுகோலைக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.முகமது ஹனீஃப் அசாத் உயிரோடுதான் இருக்கிறான், அவனுடைய காயிதே அஸாம் பரிசாகக் கொடுத்த பாகிஸ்தானில். அந்த நாடு மிகவும் திறமை பெற்ற மாணவரான கான் லியாகத் அலிகானின் தலைமையில் இந்த முரட்டுத்தனமான உலகத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரமான இந்த துண்டு நிலத்தில் தான், பஞ்சாப் ஆர்ட்ஸ் பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு வெளியே, வெற்றிலை விற்கும் கடைக்கு அருகாமையில் உடைந்து கிடக்கும் கட்டிலில் அமர்ந்து கொண்டு, அவனுடைய சாகிப்புக்காக காத்திருப்பதோடு, குறித்த நேரத்தில் அவனுக்கான ஊதியம் கொடுக்கப்பட போகும் அந்த நாளுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் காயிதே அஸாம் அவனுக்கு அறிவுரை தந்தது போல சற்றே இந்துவாக மாறுவதற்கும் தாயாராக இருந்தான்.சென்ற முறை நான் அவனிடம் காயிதே பற்றி பேசிய போது, மிகவும் மனம் உடைந்து இருந்தான். வெற்றிலை வாங்குவதற்குக் கூட அவனிடம் ஏதும் இல்லாத நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். அவனிடம் ஏதேதோ பேசி எப்படியோ அவனுடைய மண்டைக்குள் இருந்த பிரச்சனைகளிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்தேன்.அவன் பெருமூச்சு விட்டான். “என்னுடைய சாகிப் இறந்து விட்டார். அவருடைய கடைசி பயணத்தின் போது கூரை அகற்றப்பட்ட அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியை ஓட்டிக்கொண்டு நான் உடனிருந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு ஏங்கினேன். அவர் இறுதியாய் அடைய வேண்டிய இடத்திற்கு எவ்வளவு மென்மையாய் வண்டியை நான் ஓட்டியிருக்க வேண்டும் என்று ஏங்கினேன். எளிதில் புண்படக்கூடிய அவரது சுபாவத்திற்கு கரடுமுரடான, தூக்கிப்போடும் பள்ளங்கள் ஏற்றதில்லை. நான் இதைக் கேள்விப்பட்டேன் - அது உண்மைதானா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவருடைய கடைசிப் பயணமாக இருந்திருக்க வேண்டியதில் விமானம் மூலம் கராச்சிக்கு அவர் கொண்டுவரப்பட்டுப் பிறகு கவர்னர் ஜெனரல் வீட்டிற்கு அவரை எடுத்துச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வண்டி சிறிது தூரம் கடந்த உடனே இஞ்சின் ஏதோ மக்கர் செய்து நின்று போனதாம். என்னுடைய சாகிப் இதனால் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என்று எனக்குத் தெரியும்.’’அசாத்தின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

Read more...

புறக்கணிக்கப்பட்ட கவிதை

இன்று மிகச்சிறந்த கவிஞராக கொண்டாடப்படும் ஷெல்லி வாழும் காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதையை வெளியிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டவர். அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்துத்தான் அவரது கவிதைகள் அவரது மனைவியால் வெளியிடப்பட்டன.

1810 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஷெல்லி. தனது 17 வயதில் நாத்திகத்தின் அவசியம் (The Neccessity of Atheism) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது. தொடர்ந்து இதுபோன்ற புரட்சிக் கருத்துக்களை ஷெல்லி வெளியிட்டார்.

ஷெல்லியின் தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மதப்பற்று மிகுந்தவர். அவர் ஷெல்லியின் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டினார். ஷெல்லி மறுக்கவே உதவி செய்வதை தந்தை நிறுத்திக் கொண்டார். இதனால் உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டது, இருந்தாலும் தன்னுடைய புரட்சிகர எழுத்தை மட்டுமே ஷெல்லி நிறுத்திக் கொள்ளவே இல்லை.

அவர் இத்தாலியில் தங்கியிருந்தபோது படகொன்றில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பெரும் புயலடித்து படகு கவிழ்ந்தது. 1822 ம் ஆண்டு 30 வயது கூட நிறைவடையாத ஷெல்லி மரணமடைந்தார். ஆனால் அவரது கவிதைகள் அவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட போது பெரும் புயலைக் கிளப்பியது. இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.




Read more...

பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்



பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்
1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி மாலை 4 மணி. விரிந்து பரந்த லாகூர் சிறைச்சாலையின் உயர்மட்ட அதிகாரி, சிறையின் அறைக்கதவுகளை ஒவ்வொன்றாக வேகமாக தன் பலமுள்ள மட்டும் இழுத்துச் சாத்திப் பூட்டுப் போட்டுக் கொண்டே வருகிறார். அவருடன் தடபுடலாக பத்துப் பதினைந்து துணை அதிகாரிகள், கைகளில் கொத்துச் சாவிகளுடன் உயர்மட்ட அதிகாரியின் வேகத்திற்கு ஈடுகொடுத்தும், அவருக்கு பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டும் வருகின்றனர்.ஒவ்வொருநாள் மாலையும் ஏழு மணிக்கு வெளியிலிருப்பவர்களை உள்ளே போகச் சொல்லி, அவர்கள் உள்ளே சென்றவுடன் பூட்டி விட்டு, அவசரமில்லாமல் பொறுமையாகச் செல்லக்கூடிய இவர் அன்று மிகுந்த பதற்றத்துடன், பரபரப்புடன் காணப்பட்டார். ஜலந்தரிலிருந்து வெளிவரும் ‘டெய்லி பிரதாப்’ என்ற நாளிதழின் ஆசிரியர் வீரேந்திரா, விடுதலைப் போரில் வீறுகொண்டு ஈடுபட்டதன் காரணமாக, ஆங்கிலேய ஆதிக்க வெறிகளால் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்ல... அவரைப் போன்று நூற்றுக்கணக்கானோருக்கு அங்கு அதே நிலைதான்.வீரேந்திரா தனது நினைவுக் குறிப்பில், “அன்று மதியம் இரண்டு மணிவரை, ‘நாளைதான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட இருக்கிறார்கள்’ என்று எண்ணியிருந்தோம். மார்ச் 24 ஆம் தேதிதான் தூக்கிலிடப்படவேண்டும் என்று பகத்சிங் வழக்கை விசாரித்த நீதிபதியே தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த செய்தித்தாளில் மார்ச் 24 ஆம் தேதி தூக்கிலிடப்ப்படுவதாக செய்தியும் வெளிவந்தது” என்று குறிப்பிடுகிறார்.மதியம் இரண்டு மணி சுமாருக்கு பகத்சிங்குடன் தொடர்பு வைத்திருந்த அந்தச் சிறையின் கன்விக்ட் வார்டர் ஒருவர், வீரேந்திராவிடம் பகத்சிங்கை அன்றைய தினமே தூக்கிலிடப்படும் செய்தியை சொல்லியனுப்பினர். இந்தச் செய்தி கேட்ட வீரேந்திராவும் மற்ற தோழர்களும் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டினதைப் போன்றதோர் அதிர்ச்சி அடைந்தனர்.செய்தி சொன்ன கன்விக்ட் வார்டரிடம் கண்ணீர் மலக, “நீ மீண்டும் பகத்சிங்கைப் பார்த்து எனக்கு அவர் நினைவாக ஏதெனும் ஒரு பொருளைப் பெற்று வா” என்று வீரேந்திரா நிலைதடுமாறிய நிலையில் சொன்னார். நீண்ட நேரத்திற்குப் பிறகு பகத்சிங் வெள்ளை நிற சீப்பொன்றையும், ஒரு பேனாவையும் அன்புப் பரிசாகக் கொடுத்தனுப்பினார். அந்தச் சீப்பின் மீது ‘பகத்சிங்’ என்று தனது பெயரை பகத்சிங்கே பொறித்து அனுப்பியிருந்ததைப் பார்த்து தாரை தாரையாக கண்ணீர் விட்டார் வீரேந்திரா.அப்போதெல்லாம் சிறைவிதியின்படியும், நடைமுறைப் பழக்கப்படியும் குளிர்காலமாக இருந்தால் காலை 8 மணீக்கும் வெயில் காலமாக இருந்தால் 7 மணிக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவர். மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்புப்படியும், நடைமுறைப்படியும் காலை 7 மணிக்குத் தூக்கிலிடுவர் என்று நினைத்து, அடுத்த நாள் அந்தத் துக்கச் சம்பவம் நடக்க இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்த சிறையின் மற்ற கைதிகளுக்கு அன்றே ... இன்னும் சில மணித்துளிகளில் ... பகத்சிங்கும் தோழர்களும் தூக்கில் தொங்கப் போகிறார்கள் என்பதைக் கற்பனையிலும்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.லாகூர் சிறையின் வரலாற்றில் அப்படிவோர் அதிரடிச் சம்பவம் அதற்கு முன்பு நடந்ததேயில்லை. தன்னுடைய அரசின் நீதிமன்றத் தீர்ப்பையே அவசர அவசரமாக தானே மீறுகிற கொடுமை அங்கு அதுவரை யாராலும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.“பகத்சிங்கை விடுதலை செய்” என்ற முழக்கத்துடன், ஆக்ரோஷமான முறையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புறப்பட்டுவிட்டனர். அவர்கள் லாகூர் சிறைக்கதவுகளை நொறுக்கி, உள்ளே நுழைந்து, இரவோடு இரவாக பகத்சிங்கை விடுவித்து வெளியே அழைத்துச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவே ஆங்கிலேய அரசின் இந்த அவசரம்.தூக்கிற்கு முன் ஆண்டவரைப் பிரார்த்தித்திற்கும்படி பகத்தின் தந்தை அவரிடம் கூறினார். அதற்கு பகத்சிங், “தந்தையே! என் வாழ்நாளில் நான் ஆண்டவரைப் பிரார்த்தித்ததில்லை. வேண்டுமானால் என் தேசத்தவர் துயர்ப்படுகிறார்கள் என்பதற்காக ஆண்டவரைத் திட்டியிருக்கிறேன்! இந்நிலையில் மரணத்தைத் தழுவும் நான் அவரை நோக்கி வணங்கினால் என்னை கோழை என்று ஆண்டவர் நினைத்துக் கொள்வார். என் இருபத்துமூன்றாண்டு கால வரலாற்றில் ஒரு விநாடிகூட கோழையாக இருக்க நான் விரும்பவில்லை” என்று திடமனதுடன் பதில் கூறினான் என்று சிறை அதிகாரி குறிப்பிடுகிறார்.“நூற்றுக்கணக்கான கைதிகள் தூக்கிலிடப்பட்டதை நேரடியாக அதிகாரி என்ற முறையில் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஆனால், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தெளிவாகவும், மிகுந்த தைரியத்துடனும், சலனமில்லாமலும் தூக்கு மேடையை நோக்கி வீரத்துடன் சென்றது போன்று இதுவரை தூக்கிலிடப்பட்ட எவரையும் நான் பார்த்ததில்லை” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.மாலை 7 மணி லாகூர் சிறை முழுக்க மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. காற்று வழியே இச்செய்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளின் காதுகளை எட்டியது. வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் மௌனம் காத்தனர்.“இன்குலாப் ஜிந்தாபாத்”, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கத்துடன் விடைபெற்றனர் வீரமறவர்கள்.இந்த இடிமுழக்கத்திற்கு ஈடுகொடுத்து, லாகூர் சிறையின் மதிற்சுவர்களில் பட்டு தெறித்தது பல்லாயிரம் தோழர்களின் பதில் முழக்கம். ஒரு மணி நேரம் லாகூர் சிறையே அதிரும் அளவுக்கு கோஷம் போட்ட பின்னர், சொல்லி வைத்தாற் போன்று மீண்டும் அமைதி நிலவியது!ஆம் காற்றில் கலந்த பேராசை இன்னும் நம் இதயத்தை எரியவிட்டுக் கொண்டேயிருக்கிறது!

Read more...

இந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி

1498 - வாஸ்கோடகாமா இந்திய வருகை
1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி
1615 - ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை
1757 - பிளாசி யுத்தம்1
1770 - வங்காளப் பஞ்சம், சன்னியாசி எழுச்சி
1779 - கட்டபொம்மன் தூக்கு
1806 - வேலூர் கோட்டை புரட்சி
1857 - முதல் இந்திய சுதந்திரப் போர்
1858 - பிரிட்டிஷாரின் நேரடி அதிகாரம்
1877 - விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டல்
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
1905 - வங்காளப் பிரிவினை
1908 - திலகர், வ.உ.சி. கைது
1911 - ஆஷ் கொலை
1913 - கத்தர் கட்சி உதயம்
1914 - முதல் உலகப் போர் ஆரம்பம்
1915 - காந்தியின் இந்திய வருகை
1916 - கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல்
1918 - ரௌலட் சட்டம்
1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை
1920 - கிலாபாத், ஒத்துழையாமை இயக்கம் துவக்கம் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உதயம்
1921 - மாப்ளர் எழுச்சி
1922 - சௌரி சௌரா மக்கள் எழுச்சி, ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்படல்
1925 - கான்பூர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு1928 - சைமன் கமிஷன் வருகை1929 - டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு, லாகூர் காங்கிரஸில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம்
1930 - உப்பு சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு இயக்கம், சிட்டகாங் புரட்சி
1931 - பகத்சிங் தூக்கிடப்படல், இரண்டாம் வட்டமேஜை மாநாடு
1934 - அகில இந்திய கிஸான் சபை, அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம்
1937 - பார்வர்டு பிளாக் கட்சி உதயம்1939 - இரண்டாம் உலகப் போர் துவக்கம்
1940 - தனிநபர் சத்தியாக்கிரகம்
1942 - வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
1943 - நேதாஜி இந்திய ராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல்
1946 - கப்பற்படை எழுச்சி
1947 - தேசப் பிரிவினை, இந்தியா சுதந்திரமடைதல் பாகிஸ்தான் உதயம்

Read more...

திப்புவின் ஆட்சித்திறன்


திப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். “பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது. “அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அவரிடம் சரணடைவோம் என உபதேசிக்கிறது திருக்குரான். “மதப் போர்வையில் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்.” காலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு. சிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய ‘மரகதலிங்கம்’ முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை ‘பாதுஷா லிங்கம்’ என்றே அழைக்கின்றனர். திப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந்தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை ‘பிரதிஷ்டை’ செய்து, தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது. “அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன. தனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. “இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்” என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.

Read more...

தளபதி திருப்பூர் மொய்தீன் ...

பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.

தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.

மறியல் போராட்டம் அன்று விடியற் காலை 8.30 மணிக்கு ரயில் வண்டியின் முன்னர் படுத்து திருப்பூர் மொய்தீன் அவர்கள் மறியல் செய்தார்கள். இதுவே மறியல் இயக்கத்தின் தொடக்கம். உடனேயே அவர் போலீஸ் சாரால் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சரியாக காலை 8.45 மணிக்கு திருப்பூர் குமரனும் ரயில் முன் படுத்து மறியல் செய்தார். காவல் துறையினரின் தடியடிக்கு மத்தியிலும் சுதந்திர கொடியின் மானத்தை காத்தார். அமரரானார்.

சுதந்திர போராட்ட காலத்தில், தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தளபதி என அழைக்கப்பட்ட பட்டுகோட்டை சிங்கம் அழகிரிசாமி அவர்கள் அன்று நடைபெற்ற அரசியற் கூட்டத்தில் ஒரு திருப்பூர் குமரனுக்கு ஈடாக எமக்கு ஒரு திருப்பூர் மொய்தீன் கிடைத்து இருக்கின்றார். குமரனின் பணியை மொய்தீன் தொடருவார். என குறிப்பிட்டார். அழகிரிசாமி அவர்களின் கணிப்பு சற்றும் பிசகவில்லை. மொய்தீன் அவர்களின் பணி அவ்வாறே அமைந்து இருந்தது.

மொய்தீன் அவர்கள் நாவன்மை மிக்க பேச்சாளர் ஆவார். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தம் சிம்ம குரலால் இயக்க எழுச்சியை ஊட்டினார். ஆங்கில கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் தெளிவுபடுத்த முடியாத சிக்கலான அரசியற் பிரச்சினைகளை எல்லாம் தமக்கே உரிய கம்பீர தொனியில் கேட்போர் நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளக்க வல்ல ஆற்றல் பெற்று விளங்கினார். தான் தோன்றி தலைமை தனத்தை வெறுத்தவர். இயக்க ரீதியான கட்டுபாடுகளுக்கு பணியும் பண்பு உடையவர். சமுதாய பணியையே வாழ்கையின் லட்சியமாக வரித்து கொண்டவர்.

தேசிய போராட்ட காலங்களிலும் சரி, முஸ்லீம் லீகின் அரசியற் பணிகளிலும் சரி மொய்தீன் அவர்களின் தொண்டு தனித்துவ முத்திரை பெற்று திகழ்ந்தது. லீகிற்குள் மிதவாத கொள்கைக்கு மாறுபட்ட தீவிர செயற் போக்கினை ஆதரித்தவர். மக்களுடன் மக்களாக வாழ்ந்து, மக்களுடைய துன்பங்களையும் துயரங்களையும் தெளிவாக உணர்ந்து இருந்தார். இதனால் மொய்தீன் அவர்கள் இடதுசாரி அரசியல்வாதி என்றும் அழைக்கபட்டார்.

மொய்தீன் அவர்களுடைய இந்த தனித்துவ போக்கு 1941 ஆம் ஆண்டிலேயே தூலமாக தெரிந்தது. அவ்வாண்டில் முஸ்லீம் லீகின் தலைமை பதவிக்கு ஜனாப் அப்துல் ஹமீது அவர்களும், கா ஈ தே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களும் போட்டியிட்டனர். அப்துல் ஹமிது இடதுசாரி மனப்பான்மை உள்ளவர் அல்ல. எனினும் மிதவாதி அல்லர். இதன் காரணமாக மொய்தீன் அவர்கள் அப்துல் ஹமீது அவர்களை ஆதரித்தார். அதன் விளைவாக தான் இன்று மொய்தீன் அனுபவிக்கிறார் என்று அவருடைய அரசியல் வாழ்வை கூர்ந்து கவனித்தவர்கள் அபிபிராயபட்டதாகும்.

மொய்தீன் அவர்கள் பணி பயன் பற்றட்டது. பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் சிறிது காலம் செயற் படாமல் இருந்தது. அப்பொழுது கூட மொய்தீன் அவர்களின் பணி பட்டி தொட்டி எல்லாம் தொட்டு பரவியது.

அவருடைய கலப்பற்ற தொண்டு மனப்பான்மையும் , சீரிய நாவன்மையும், பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் முறையாக செயற்படத் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, காயல்பட்டினம் தொல்குடியில் உள்ள மக்கள் மொய்தீன் அவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தகது. 1954 ஆம் ஆண்டில் இதற்காக காயல்பட்டிணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவிலே அவருக்கு வீரவாள் வழங்கபெற்றது. தளபதி என்ற பெயரும் சூட்ட பெற்றது.

இந்தியாவில் முஸ்லிம் லீகின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்கான முயற்சிகள் 1956 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டது. லீகின் அமைப்பாளராக இஸ்மாயில் சாஹிப் தேர்வு செய்யபட்டார். இதே ஆண்டில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. முஸ்லிம் லீக் கலைக்கபடல் வேண்டும் என்றும், அன்றேல் முஸ்லிம் மக்கள் வன்முறையில் பழிவாங்க படுவர்கள் என்றும், பட்டதாரிகளான முஸ்லிம்கள் அச்சம் தெரிவித்தனர். சிலர் லீகை கலைத்துவிட்டு, சுய ஆதாயம் பெறவும் விழைந்தனர்.

எப்படியும் முஸ்லிம் லீக் செயற்படல் வேண்டுமென்ற கொள்கையில் இஸ்மாயில் சாஹிப் உறுதியாக நின்றார். அப்பொழுது அவருடைய கொள்கைகளுக்கு உறுதுணையாக நின்று, அவருடைய முயற்சியில் பக்க பலமாக உழைத்தவர்கள் திருப்பூர் மொய்தீன், கே.டி.எம். அஹ்மத் இப்ராஹிம் சாஹிப், எம். எல். எ. மஜீத், ராஜாகான் ஆகியோர். உழைப்பு பயன் தந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயர் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மறு பெயர் சூட்டப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அரசியற் நிறுவனமாக செயற்படுவது பற்றிய வாக்கு எடுப்பில் ஒன்பது பேர் எதிர்த்து வாக்கு அளித்ததுடன், சிலர் லீகின் உறுப்பினர் பதவிகளையும் துறந்தனர். எதிர்தோருள் சையீத் அப்துல் காதர் அவர்கள் குறுபிடதக்கவர். ஆயினும், அப்பொழுது அதனை அரசியல் நிறுவனம் ஆக்க வேண்டும் என்று வாக்கு அளித்த எட்டு பேருடைய சலியாத உழைப்பினால் 1956 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட கோட்பாடுகளையும், சட்ட திட்டங்களையும் அடித்தளமாக வைத்து 1958 ஆம் ஆண்டளவில் இயக்க ரீதியாக செழிப்புடன் செயற்பட தொடங்கியது.

1960 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீகின் மாநாடு குரோம்பேட்டை இல் நடைபெற்றது. இம்மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் எனில் இந்த மாநாட்டில் தான் பொது தேர்தலில் போட்டி இடுவது என்ற தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது. இத்தீர்மானத்திற்கு அமைய 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலில், எதிர் கட்சிகள் சிலவற்றின் ஆதரவுடன் லீக் வேட்பாளர் ஏழு பேர் தமிழ்நாட்டில் போட்டி இட்டனர். அந்த தேர்தலில் எந்த வேட்பாளரும் வெற்றி ஈட்டவில்லை. லீகின் ஆதரவுடன் போட்டி இட்ட திராவிட முன்னேற்ற கழகத்தினர் தமிழ்நாடு சட்ட சபையில் ஐம்பது இடங்களில் வெற்றி ஈட்டினர். தேர்தலிலே செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்நாடு மேல் சபைக்கு லீகின் பிரதிநிதி ஒருவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க. முன்வந்தது.

பொது தேர்தலில் போட்டி இட்டு தோல்வி அடைந்த எவரையும் மேற்சபைக்கு வேட்பாளராக நிறுத்துவது இல்லை என்ற முடிவினை லீக் எடுத்து இருந்தது. இதன் காரணமாக மேற்சபைக்கு உறுபினராகும் நல்லதொரு சந்தர்பத்தை திருப்பூர் மொய்தீன் இழக்க நேரிட்டது. இருப்பினும் ராஜ்ய சபைக்கு லீக் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் வாய்ப்பு வரும் பொழுது திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கே முதலிடம் கொடுப்பது என்று அப்பொழுது கொள்கை அளவில் ஏற்று கொள்ளப்பட்டது.

1964 ஆம் ஆண்டில் அத்தகைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. லீகில் புதிதாக சேர்ந்த சில ஆங்கில பட்டதாரிகள், முது பெரும் அரசியல்வாதியான மொய்தீன் அவர்களுக்கு போதிய ஆங்கில அறிவு இல்லை என்பதை காரணமாக காட்டி அந்த பெருமை அவருக்கு கிட்டாதவாறு தடுத்தனர். இது மொய்தீன் அவர்களுக்கு எதிராக லீகின் அங்கத்தினர்கள் இயற்றிய மாபெரும் அநீதியாகும். ஏன் எனில் 1962 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு போட்டி இடும் தகுதி திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கு இருப்பதாக கணித்து, அவரை ஒரு வேட்பாளராக நிறுத்திய லீகின் காரிய சபை, 1964 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு தகுதி இல்லை என முடிவெடுத்தது எவ்வகையிலும் நியாயம் ஆகாது. இந்த செயல் அன்று தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1966 ஆம் ஆண்டில் சென்னை மேற் சபைக்கு காலியாகும் இடம் ஒன்றினை எப்படியும் .மு.க ஆதரவுடன் மொய்தீன் அவர்களுக்கு பெற்று கொடுப்பதாக அப்பொழுது மிகுந்த சமாதானம் கூறபெற்றது. எனினும் இந்த வாக்குறுதி காப்பாற்ற படவில்லை. சென்னை மேற் சபை உறுப்பினர் பதவி தேவை இல்லை . சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவி வேண்டும் என்று ஆம் ஆண்டில் லீக் செய்த தீர்மானம் வேண்டும் என்றே மொய்தீன் அவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை மோசடி என அன்றைய முஸ்லீம் லீக் பிரமுகர்களே கருத்து கூறினர்.

1967 ஆம் ஆண்டில் பொது தேர்தல்கள் வந்தன. சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதின் பேரில் மொய்தீன் போட்டியிடவில்லை. 1968 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு லீகின் வேட்பாளராக மொய்தீன் அவர்களை நிறுத்துவது என வாக்குறுதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு வந்தது. லீகின் காரிய கமிட்டி கூடியது. ராஜ்ய சபைக்கு லீகின் மனு கோரி மொய்தீன் அவர்களுடன் கே.டி.எம்.அஹ்மத் இப்ராஹிம் சாஹிப், எஸ்.எ. காஜா மொய்தீன் ஆகியோர் விண்ணப்பித்து இருந்தனர். திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீண்டும் மீறப்பட்டு, யாரை லீகின் வேட்பாளராக நிறுத்துவது என்பதை காரிய சபை வாக்கெடுப்பில் காஜா மொய்தீன், திருப்பூர் மொய்தீன் அவர்களை காட்டிலும் ஐந்து வாக்குகள் அதிகம் பெற்றார்.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படல், தனக்கு பதவிகள் கிட்டக்கூடிய சந்தர்பங்கள் ஒவொன்றாக கை நழுவியமை பற்றி பாராட்டாது, கவலையோ, ஏமாற்றமோ சிறிதும் கொள்ளாது, தமது அரசியற் பணிகளை சிறப்பாக செய்து வந்தவர். இதுவே மொய்தீன் அவர்களின் சிறந்த பண்பிற்கு உதாரணமாகும்.

அன்றைய சூழலில் ஜனாப். தை.அ. அப்துல் காதர் அவர்களுக்கும் மொய்தீன் அவர்களுக்கும் உள்ள தொடர்பினை குறிப்பிடுதல் சற்று பொருத்தமானதாகும். அப்துல் காதர் அவர்கள் லீகின் பொருளாளராக ஏழு ஆண்டுகள் பணி செய்தவர். முஸ்லீம் லீக் அரசியற் கட்சியாக செய்யற்படுவதில் திருப்பூர் மொய்தீன் அவர்களுடன் இவர் அன்று காலகட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்டு இருந்தார். பின்னர் அவரது வலக்கரமாக இணைந்து உழைத்து வந்தார். சென்னை மேற்சபைக்கு லீகின் மனுகோரி இருவர் போட்டி இட்டனர். ஒருவர் தை.அ. அப்துல் காதர் மற்றவர் ஜானி சாஹிப். தை.அ. அவர்களும் ஐந்து வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார். மொய்தீன் அவர்கள் மீது கொண்டுள்ள பற்று காரணமாக தான் தை.அ. தோற்கடிக்கப்பட்டார் என்று அன்றைய அரசியல் வட்டாரத்தின் கணிப்பாகும்.

திருப்பூர் மொய்தீன், தை.அ. செ. அப்துல் காதர் போன்றோர் சுய பலன் கருதாது பொதுப்பணி புரியும் பண்பினர். லீகின் கட்டுபாடுகளுக்கு, எவ்வளவு நம்பிக்கை மோசடிகள் நடைபெற்ற போதிலும், கீழ்படிந்து பணி புரிந்து, லட்சியத்துடன் வாழ்ந்தவர்.

எந்த அரசியற் கட்சிக்குள்ளும் உள்கட்சி போராட்டம் நடைபெறுவது உண்டு. இந்த உள் கட்சி போராட்டம் கட்சியின் கொள்கை அடிப்படையில் மட்டுமே நடைபெற்றால், வரவேற்கலாம். ஜனநாயக வளர்ச்சிக்கு இந்த உள்கட்சி போராட்டம் உதவியாக இருக்கும். ஆனால் முஸ்லீம் லீகில் அன்று நடைபெற்ற உள்கட்சி போராட்டம் வேறு வகையில் அமைந்து இருந்தது. கோஸ்டி பிரிவினர் ஒருவரை ஒருவர் அழிப்பதற்கும், அடக்கி ஒடுக்குவதற்கும் பயன்படுத்த பட்ட செயல்கள் அன்று முதல் இன்று வரை அக்கட்சி வளர முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணமாகும்.

முஸ்லீம் லீகிற்குள் அன்று புதிதாக இணைந்த ஆங்கில கல்வி பெற்றவர்கள் (அப்துல் சமது ) ஒரு பிரிவாகும், மற்றவர்கள் ஒரு பிரிவாகவும் செயற்பட்டு வந்தனர்.

தமக்கு ஆங்கில அறிவு இருப்பதாக நினைத்து அரசியல் வானில் கொடி கட்டி பறக்க வேண்டிய கர்மவீரர்களை அதற்கு பலிகடா ஆக்கியது மிக பெரிய தவறாகும். இதனால் முஸ்லீம் லீகின் வளர்ச்சி பெருமளவில் பாதிப்பு அடைந்தது. திருப்பூர் மொய்தீன் போன்றோர் அனுபவம் மிக்கவர்கள். மக்களின் நம்பக தன்மைக்கு ஏற்ப உண்மையாக நடந்தார். அவருக்கு தமிழக அரசியல் வரலாற்றில் கிடைத்த மரியாதை இன்றைய இளைய சமூகத்துக்கு தெரியாமல் போனது வேதனைக்குரியதாகும்.

பொது மேடைகள் மூலம் பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட செம்மல்களுள் மூவர் விசேசமாக குறிப்பிட தக்கவர்கள். முதலில் பெரியார் ஈ.வே.ரா.வை குறிப்பிடலாம். அவர் கண்ட மேடைகள் பதினைந்து ஆயிரத்திற்கு அதிகம் என்று கணிப்பர். அடுத்தது திருப்பூர் மொய்தீன். இவர் சுமார் பத்து ஆயிரம் மேடைகளில் உரை நிகழ்த்தி உள்ளார். மூன்றாவது தமிழக முதல் அமைச்சராக இருந்த அண்ணாதுரை சுமார் ஏழு ஆயிரம் என்று கணிக்கப்படுகிறது.

இனிமேல் திருப்பூர் மொய்தீன் அவர்கள் எந்த ஒரு பதவிக்கும் போட்டி இடுவதில்லை என்ற முடிவிற்கு வந்தார். பதவிப் பித்தர்கள் பதவியை அனுபவித்து கொண்டு போகட்டும். நம் வழி பணி செய்து கிடப்பதே என்ற அடிப்படையில் தம் வாழ் நாள் வரை சமுகப் பணி செய்து மறைந்தார்.

ஒரு சமுதாய தலைவரை முஸ்லீம் லீக் மறந்தது மறைத்தது இல்லாமல் தமிழ் (முஸ்லீம்) சமுகம் அவரை நினைவு கூற மறந்தது வேதனையான செயலாகும்.

Read more...

இந்தித் திணிப்பும் அதன் விளைவுகளும்..!!!

வரலாற்றில் மிக அண்மைக்காலத்தில் உருவான இந்தியை இன்று அசுர வேகத்தில் வளர்த்தெடுக்க முயல்கிறது வடவர் ஆதிக்கம். அவதி, விரஜபாஷா, போஜ்பூரி போன்ற 13,14 வட்டார மொழிகளிலிருந்து தேவநாகரி உருவில் உருவாக்கப்பட்ட இந்தி, சமூகத்தின் மேல்தட்டு வர்க்கம் அதாவது ஆளும் வர்க்கத்தின் அலங்கரிக்கப்பட்ட ரப்பர் பொம்மை. இந்தி பேசும் மாநிலங்கள் என்று சொல்லப்படும் மாநிலங்களின் கிராமங்களில் வாழும் மக்கள் பேசுவது இந்தி அல்ல. அவதி, போஜ்புரி போன்ற இலக்கிய செறிவுடைய வட்டார மொழிகளே. இந்தி - மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஆளும் வர்க்கம் கையில் எடுத்த ஒரு கருவி.

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் உழைப்பை, இயற்கை வளங்களை உறிஞ்சி ஒரு மொழிக்கு ஊட்டி அதை வளர்ந்துவிட்டதாகச் சொல்வது மொழிப்பற்றுள்ள மற்ற மாநில மக்களின் மனதைப் புண்படுத்துவதேயாகும்.

மொழி என்பது ஓர் உணர்வு, தாய்ப்பாலோடு ஊட்டப்பட்டது. ஆனால் தாய்களில் ஒருவரது தாய்தான் சிறந்தவர்; அவரை ஏற்றுக் கொண்டால்தான் நாட்டில் ஒற்றுமை நிலவும்; நாடு முன்னேறும் என்பது மற்றவர்களை அடிமையாக நினைத்து சொல்லப்படும் அற்பச் சொற்கள். இதைத்தான் வடவர் வர்க்கம் அசாம், தமிழகம் போன்றவைகளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது. எல்லோரது தாய்களும்/உணர்வுகளும் சமம். மரியாதைக்கு உரியவர்கள்/உரியவைகள், அவரவர் தன் தன் தாய் மொழியில் மய்ய, மாநில பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்று வந்தால் தான் வேலை உண்டு என்று வடவர் வர்க்கம் சொல்லுமாயின் அப்போதுதான் நான் ஓர் இந்தியன்; சமமாக நடத்தப்படுபவன் என்ற எண்ணம் உருவாகும். அதுதான் நாட்டு ஒற்றுமைக்கு நல்லது.

சரி, அவரவர் மொழிகளில் போட்டியிட்டு தென்மாநிலத்தவர் வடமாநிலத்தில் போய் பணிசெய்ய முடியுமா? இது நல்ல கேள்விதான். பதில் என்னவென்றால் அந்நிலை வருமாயின் பணியமர்த்தப்படு முன் அவரவர் சொந்த மாநிலத்திலோ அல்லது பணிசெய்யப்போகும் மாநிலத்திலோ மூன்று மாதங்கள் பணியிட மொழி சொல்லிக் கொடுத்தால் போதும், அல்லது 100,120 சொற்கள் சொல்லிக்கொடுத்தால் போதும். இந்திய மொழிகளுக்குள் பொதுவான ஓர் ஒற்றுமை உண்டு, அதாவது வாக்கிய அமைப்பு, எழுவாய்+செயப்படுபொருள்+வினைச்சொல் என்பதாகும். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவர் பணிசெய்யும் இடத்தில் மூன்று மாதங்களில் மற்றவர்களோடு கலந்து விடுவார்.

மும்மொழித் திட்டம் ஒரு சதித் திட்டம். தாய் மொழி, இந்தி, ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராத மாநிலங்களுக்கு விதித்தார்கள். நடைமுறையில் பார்க்கும் போது இதன் உட்பொருள் வடவர்கள் இந்தி மட்டும் படித்தால் போதும் என்பதுதான். வடவர்களும் தாய் மொழி, இந்திப் பேசாத மாநில மொழிகளில் ஏதாவது ஒன்று, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விதி செய்தார்களா? இல்லையே. அப்படிச் செய்திருந்தால் வடவர்கள் மூன்று மொழிகளைப் படிப்பதில் எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்திருப்பார்கள். ஒரு நாட்டின் குடிமக்களில் சிலர் ஒரு மொழியை(இந்தியை) மட்டும் (அதுவும் தாய் மொழியை மட்டும்) படித்துவிட்டு இந்தியா பூராவும் சுற்றி வரவும், பலர் மூன்று மொழிகளைப் படிக்கவேண்டும் என்பதும் சதி அல்லவா?

தமிழகம் தவிர, மற்ற தென்மாநிலங்கள் இந்தியை ஏற்றுக்கொண்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் வடவர்கள் அம்மாநிலங்களுக்கு வேலைக்கோ, அல்லது போட்டித் தேர்வு எழுதவோ வரும்போது விரட்டப்படுகிறார்கள். ஆனால் இந்தியை ஏற்காத தமிழகம் வடவர்களை பணியமர்த்தி அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கிறது. எனக்கு கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டு என்வீட்டிற்குள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து உட்கார்ந்துக் கொள் என்பதுதான் இன்றைய சுயமரியாதையற்ற, சுயநலமுள்ள தமிழர்களின் கோட்பாடு. நீ மட்டும் ஒரு மொழி படித்தால் போதும், நான் மட்டும் மூன்று மொழிகள் படிக்கணுமா? நீ தன் தாய் மொழியில் தேர்வு எழுதலாம், நான் மட்டும் எனக்கு அயல் மொழியான இந்தி, அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதணுமா? இந்தியில் புலமைப் பெற 5 ஆண்டுகள் போதும். இதே 5 ஆண்டுகளில் 3 மொழிகளில் நான் புலமைப் பெற முடியுமா? இருவர்களும் இந்தியர்கள் தானே. நான் மட்டும் ஏன் மூன்று மொழிகளைச் சுமக்க வேண்டும்? என்று கேட்க அல்லது கேட்பவர்களை ஆதரிக்க தமிழகத்தில் நாதி இல்லை.

இப்பொழுது உளவியல் ரீதியாக தமிழர்கள் அடக்கி, அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் தருணம். கேட்பதை எல்லாம் கொடுத்துவிட்டு இந்தியைத் திணித்துவிடலாம் என்று திரு.கபில் சிபல் திட்டமிட்டுள்ளார். என்ன செய்வது? இன அடையாளத்தை அழிக்க திட்டம்போட்டு செயல்படும் வடவர்களை வரவேற்க தமிழக சூழ்நிலை தயாராக இருக்கிறது என்பது தான் இப்போதைய நிலை.

இந்தியைப் பரப்ப அதை திணிக்க வேண்டுமென்பதல்ல. அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள், புதிய சமுதாயச் சிந்தனைகள் உருவாக்கம் ஆகியவைகள் இந்தியில் புதிதாக எழுதப்படுமாயின் அவைகள் புதுமையாக இருப்பின் அதை தானாகவே முன்வந்து கற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். தானாகவேப் பரவும். ஆனால் அப்படி ஒன்றும் சிறப்பு இந்தியில் இல்லை. இதெல்லாம் வடவர்களுக்குப் புரியாது. ஆளும் வர்க்கம் என்கிற மமதையில் பணபலம், துப்பாக்கிப் பலம், இந்திப் பேசாத மாநிலங்களிலுள்ள சுயமரியாதையற்ற ஆள்காட்டிகள் பலம் இவைகளை வைத்துக்கொண்டு இந்தியைத் திணிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு காலம் சரியானப் பாடம் கற்பிக்கும். ஆக்கசக்தியற்ற ஒரு மொழியை திணித்து மற்ற மொழிகளை மழுங்க வைப்பதின் மூலம் மற்ற மொழிகளிலும் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனைகள் உருவாக்கம் நடைபெறப்போவதில்லை. காலம் காலமாக ஆளும் மொழி (அடிமைப் படுத்தும் மொழி) இந்தியாகவும் அடிமைகளாக மற்ற மொழிகளும் வைக்கப்படும். இது நாட்டு ஒற்றுமைக்கு நல்லதல்ல.

இந்தியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். இது அப்பட்டமானப் பொய். இந்திப் படித்தவர்கள் இந்திப் படிக்காத மாநிலங்களுக்கு ஏன் படை எடுக்கிறார்கள்? அங்கேயேதான் வேலை கிடைக்குமே.

சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்தித்(உணர்வுத்) திணிப்பு என்பது

1. மொழிப் போருக்கு வழி வகுக்கும். கொஞ்ச காலம் கடந்து நாட்டுப் பிரிவினைக்கு வழி வகுக்கும்.

2. மற்ற மொழிகளை மழுங்க வைக்கும்; அழிக்கும்.

3. பிராந்திய உணர்வை ஏற்படுத்தும்; அது மோதலுக்கு வழி வகுக்கும்.

4. இன அடையாளத்தை அழிக்கும்; அந்த இனத்தையே அழிக்கும்.

ஆகவே அவரவர்கள் மொழியில் புலமைப் பெற அனுமதிப்பதும், பணிக்குச் செல்லும்போது பணியிட மொழியில் பயிற்சி அளித்து தன்வயப்படுத்திக் கொள்வதும் தான் நாட்டு ஒற்றுமைக்கு நல்லது. அதை தவிர்த்து திணிக்க முயற்சி செய்பவர்கள் நாட்டு ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்க விதை(திணிப்பு) விதைத்து உரம், தண்ணீர் இடுகிறார்கள் என்றுதான் வரலாற்றில் எழுதப்படுவார்கள்.

- பொன்பரப்பியான்

Read more...

ஜின்னா - பட்டேல் - இந்தியா


வல்லபாய் பட்டேலை விமர்சிப்பது கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டது பாரதிய ஜனதா. காந்தியை இழிவுபடுத்திவிட்டு, பா.ஜ.க.வில் இருக்க முடியும். ஆனால், பட்டேலை குறை கூற முடியாது; அதுதான் பா.ஜ.க.

1947 இல் பிரிந்து போன பாகிஸ்தானுக்கு காரணமாக இருந்தது ஜின்னாவா? நேருவா? பட்டேலா? என்று பா.ஜ.க. பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறது. குற்றவாளி ஜின்னா அல்ல என்கிறார் ஜஸ்வந்த் சிங். நேருவும், பட்டேலும் தான் குற்றவாளி என்று கூறி, நூல் ஒன்றையும் எழுதினார். அதற்காகவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜின்னாவை அவர் புகழ்வது பற்றி கவலை இல்லை. ஆனால் பட்டீலை குறைகூறக் கூடாது என்கிறது, பா.ஜ.க. இது ஜின்னா மீது பா.ஜ.க. காட்டும் மரியாதை என்று எவரும் தவறாகக் கருதிவிடக் கூடாது. ஏற்கனவே இப்படி ஜின்னாவைப் புகழ்ந்து பேசி அதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். கண்டனத்துக்கு உள்ளாகி, கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி, மீண்டும் ‘பாவமன்னிப்பு’ பெற்றவர் அத்வானி. எனவே, அத்வானியைக் காப்பாற்றுவதற்காக ஜின்னாவைப் புகழ்வதையும் பா.ஜ.க. அங்கீகரித் துள்ளது என்பதே உண்மை!
இது தொடர்பாக ஜஸ்வந்த்சிங் எழுதியுள்ள நூலை காங்கிரஸ் கட்சியும் எதிர்த்துள்ளது. நரேந்திர மோடி இந்த நூலை குஜராத்தில் தடை செய்து விட்டார். இந்தியா முழுதும் தடை செய்ய வேண்டும் என்கிறார், வெங்கய்யா நாயுடு!
உண்மையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம் என்று கேட்டால், இந்தியாவின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் நிறுத்திக் கொண்டு விட்ட பார்ப்பன - பனியாக்கள் தான். இவர்களின் இந்து - பார்ப்பனப் பிடியின் கீழ் சிக்கிக் கொண்டு இரண்டாம் தர குடிமக்களாகிட முஸ்லீம்கள் தயாராக இல்லை என்பதே பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணம் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
பல்வேறு மொழி கலாச்சாரங்களைக் கொண்ட பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய உபகண்டமே இந்தியா. மன்னராட்சிக்கு உட்பட்ட சுமார் 600 ‘சமஸ்தானங்களும்’ அதில் இருந்தன. நேருவும், பட்டேலும் இந்த கலாச்சார வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் ‘ஒரே இந்தியா’ என்ற கற்பனையில் மூழ்கிக் கிடந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு உரிய அரசியல் உரிமைகள் (தனித் தொகுதிகள்) வழங்கப்பட்டிருந்தன. அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களில் பட்டேலும், ராஜகோபாலாச்சாரியும் சட்ட ரீதியாக, இந்த உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கப் பெறாமல், நீர்த்துப் போகச் செய்துவிட்டனர். 1946-47 இல் இந்தியாவின் இடைக்கால அமைச்சரவையில் காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் இடம் பெற்றிருந்தன. அப்போது, ஒவ்வொரு பிரச்சினையிலும் ஜின்னா, காங்கிரசாரின் முரட்டுத்தனத்தோடு போராட வேண்டியிருந்தது. அந்த அமைச்சரவை யில் முஸ்லீம் லீக்கைச் சார்ந்த லியாகத் அலி நிதியமைச்சராக இருந்தார். அவரது நேர்மையான கண்டிப்பான நிர்வாகம் பட்டேலுக்கு கசப்பை உருவாக்கியது.
லியாகத் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழிலதிபர் களுக்கு கடுமையாக வரிகளை விதித்தபோது காங்கிரசுக்குள்ளேயே இருந்த சோஷலிஸ்டுகள் வரவேற்றாலும், பனியாக்களின் பாது காவலராக இருந்த பட்டேல் ஆத்திரமடைந்தார். பெரும் தொழிலதிபர் களில் முஸ்லீம்கள், பார்சிகள் இருந்தாலும்கூட, பிர்லாக்களுக்கு எதிராகவே இந்த வரி விதிக்கப்பட்டதாகவும் அவர்கள் எல்லாம், காங்கிரசுக்கு நன்கொடை வழங்கக்கூடியவர்கள் என்றும், பட்டேல் வகுப்புச் சாயம் பூசினார்.
இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் முழுமையான சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே ஜின்னாவின் கருத்து. நெகிழ்ச்சிப் போக்கோடு மாநிலங்கள் செயல்படவேண்டுமே தவிர, “வலிமை மிக்க ஒற்றை இந்தியாவாக” இறுகி விடக் கூடாது என்று தொடர்ந்து ஜின்னா முன்வைத்த நியாயங்களை நேருவும், பட்டேலும் ஏற்கவில்லை. ‘இந்து மகாசபை’, முஸ்லீம்கள் தனித் தேசத்தவர் என்றே தீர்மானம் போட்டது; அதன் பின்னரே ஜின்னா, தனிநாடு கேட்கத் தொடங்கினார். ஆக, பார்ப்பன-பனியா அதிகார மய்யத்தின் இந்த அதிகாரக் குவிப்புக்குள் அடங்கிப் போக மறுத்ததின் விளைவுதான் பாகிஸ்தானின் உருவாக்கம்.
இந்து மதம் ஒன்று தான், பிற மதங்களையும் வெறுக்காத சகிப்புத் தன்மை கொண்டது என்று ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் குருமூர்த்தி, அண்மையில் ஒரு ஆங்கில நாளேட்டில் எழுதியிருக்கிறார். அது உண்மையானால், இந்துத்துவ கட்சியான பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கைகள் அதன் சகிப்புத்தன்மையையா பிரதிபலிக்கிறது? என்று கேட்க விரும்புகிறோம்.
இதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் இப்போது ஒரே குரலில் பேசுகின்றன. பட்டேலையும் நேருவையும் உயர்த்திப் பிடிப்பதில் இருவரும் கரம் கோர்த்து நிற்கிறார்கள். மதச்சார்பின்மை - இந்துத்துவம் என்ற முகமூடிகள் இந்திய தேசியம் என்று வரும்போது கழன்றுவிடுகின்றனவே!
இவர்களால் இனி இந்தியாவையும் ஒட்ட வைக்க முடியாது; இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் கட்சிகளையும் ஒட்டி வைக்க முடியாது! இதை கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளட்டும்

Read more...

உலகளாவிய உணவு நெருக்கடியும் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பும்


உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவிற்கான உரிமை என்பவை இன்று இந்தியாவில் மிக அவசரமானதொரு அரசியல் பிரச்சனைகளாக மாறியுள்ளன என்பதில் வியப்பேதுமில்லை. கடந்த 20ஆண்டு காலத்தில் மிகத் துரிதமாக வளர்ந்து வந்த ஒட்டுமொத்த வருமானமும்கூட மக்களின் உணவுப் பாதுகாப்பு என்ற அடிப்படை பிரச் சனையை தீர்ப்பதாக அமையவில்லை. மாறாக, சத்துணவு குறித்த அளவுகள் தொடர்ந்து எவ்வித முன்னேற்றமுமின்றி அப்படியே நீடிக்கும் அதே நேரத்தில் தனிநபர் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு உண்மையில் குறைந்துபோயுள்ளது. பட்டினிப் பிரச்சனையானது சற்றே முன்னேறுவதற்கு பதிலாக மேலும் மோசமாகியுள்ளது என்றே கூறமுடியும்.
2005, 2006ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சமீபத்தில் தேசிய குடும்பநல சர்வேயிலிருந்து பெறப்படும் சத்துணவு குறித்த ஆதாரத்தையே எடுத்துக்கொள்வோம். இந்த ஆய்வின்படி, 3 வயதிற்கு கீழேயுள்ள குழந்தைகளில் 46 சத வீதம் பேர் எடைக்குறைவான குழந்தைகளாகவும், பெண்களில் 33 சதவீதம் பேரும், ஆண்களில் 28 சதவீதம் பேரும் சராசரிக்கும் குறைவான உடல் திண்மை அளவு (ஙிவிமி) கொண்டவர்களாகவும் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. பிறந்து 6 மாதம் 35 மாதம் வரையிலான குழந்தைகளில் 79 சதவீதம் குழந்தைகள் சோகை நோய் உள்ளவர்களாகவும், அதேபோன்று 15, 49 வயது வரையிலான திருமணமான பெண்களில் 56 சதவீதம் பேர் சோகை நோய் உள்ளவர்களாகவும், அதேபோல் ஆண்களில் 24 சதவீதம் பேர் சோகை நோய் உள்ளவர்களாகவும், கர்ப்பிணிப் பெண்களில் 58 சதவீதம் பேர் சோகை நோய் உள்ளவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவிலான இந்த சராசரி கணக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேறுபாடுகளையும் உள்ளடக்கியவை ஆகும். இந்த அறிகுறிகள் அனைத்துமே கிராமப்புற இந்தியாவைப் பொறுத்தவரையிலும் மேலும் மோசமானதாகத்தான் உள்ளது.
இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலையில் சமீபத்தில் ஏற்பட்ட உயர்வு என்பது இந்த நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும். வேலை வாய்ப்பில் நிலவும் உலகளாவிய நெருக்கடியானது நாட்டிற்குள் நிலவும் வாழ்க்கை முறையையும் மக்களுக்கான உணவு பெறுவதையும் மேலும் மோசமாக்கிவிடும். எனவே உணவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான கொள்கைக்கான பகுதிகளில் ஒன்றாக இன்று விளங்குவதோடு, உரிமைகளின் அடிப்படையிலான பொதுமக்களின் உணவுகுறித்த அணுகுமுறையை லலுப்படுத்தும் கோரிக்கைகள் மேலும் வலுப்பட்டு வருகின்றன. உணவிற்கான உரிமை குறித்த சட்டத்தை ஒட்டி தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள் இதை அடிப்படையாகக் கொண்டவையே ஆகும். ஐ.மு. கூட்டணி அரசு தனது 100 நாட்களுக்கான வேலைத் திட்டத்தில் இந்த சட்டத்தையும் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.
மத்திய அரசானது மாநில அரசுகளிடையே சுற்றுக்கு அனுப்பியுள்ள உணவிற்கான உரிமை குறித்த மசோதா என்பது இந்த உத்தரவாதத்திற்கு நேர்மாறானதாக விளங்குகிறது. உண்மையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற உணர்வை மறுதலிப்பதாகவே அமைந்துள்ளது. இந்த மசோதா குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே, ஏற்றுக்கொள்ள வியலாத பல ஆலோசனைகள் மாநில அரசுகளுக்கு ஒரு குறிப்பாக அனுப்பபட்டுள்ளது. அதாவது இந்த சட்டத்தின் வரம்புகள் (மாநிலங்களின் சொந்த மதிப்பீடுகளின்படி அடிப்படையில் இல்லாமல் மத்திய அரசின் மதிப்பீடுகளின்படி வெட்டிக் குறைக்கப்பட்டுள்ள) வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள மக்களுக்கு மட்டுமே பொருந்துமாறு இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தற்போதுள்ள மாதத்திற்கு 25 கிலோ என்பதற்கு பதிலாக quot;contentpane">35 கிலோ உணவு தானியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது
இரண்டாவதாக நிலவும் பிரச்சனை என்பது தற்போது விளக்கம் தரப்பட்டுள்ள உணவிற்கான பாதுகாப்பின்மை மற்றும் வறுமை ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு பற்றியதாகும். தேசிய மாதிரி சர்வே, தேசிய குடும்ப நல சர்வே ஆகியவற்றின் புள்ளி விவரங்கள் நமது மக்கள் தொகையில் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழை மக்களின் எண்ணிக்கையைவிட மிக அதிகமாக உள்ளது என்பதையும், பல மாநிலங்களிலும் இந்த இரு பிரிவினரும் வேறுபட்டவர்கள் அல்ல என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கின்றனர். உணவிற்கான பாதுகாப்பின்மையை மிகச் சிறப்பான வகையில் சமாளிக்க வேண்டுமெனில் உணவுப் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான இதர மக்களை தவிர்த்துவிட்டு, முன்பு வரையறுக்கப்பட்டிருந்த ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்குவது என்பதை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கான ஏற்பாட்டை மேற்கொள்வது உண்மையில் அதற்கு நேர் எதிரான விளைவையே ஏற்படுத்தும்.
மூன்றாவது பிரச்சனை இதற்கான காரணங்களில் ஒரு பகுதியாக அமைகிறது. நிலையானதொரு கண்ணோட்டத்தில் ஏழைகள் வறியவர்கள் என்று வரையறுத்த கட்டுப்பெட்டியானதொரு சட்டத்தின் அடிப்படையில் மாற்றத்தின் தன்மை குறித்த கவலையேதுமின்றி செயல்படுவதும், இந்த குழுவினைரை நீண்ட நாட்களுக்கு எந்தவித மாற்றமுமின்றி அப்படியே நீடிக்கச் செய்வதும் மூன்றாவது பிரச்சனையாக அமைகிறது. எப்படித் தான் நாம் விளக்கிவந்தபோதிலும், குடும்பங்கள் அதனுள்ளே உள்ள மனிதர்களுடன் சேர்ந்து தன்னைச் சுற்றியுள்ள மாறிவரும் சூழ்நிலைகளின் விளைவாக வறுமைக்குள் ஆட்படுகிறார்கள் அல்லது வறுமையிலிருந்து விடுபடுகிறார்கள். அதேபோன்று மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே உணவு ரீதியான பாதுகாப்பு பெற்றவர் என்ற நிலையிலிருந்து பாதுகாப்பில்லாத நிலைக்கு மாறுவதற்கான வாய்ப்பும் உண்டு. இதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. பயிர் நாசம், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வது, வீட்டிற்கான செலவைக் குறைத்து மருத்துவத்திற்கு செலவு செய்ய வேண்டிய நிலை, கடன் அதிகரிப்பது போன்று பல காரணங்களைச் சொல்லலாம். இத்தகைய குடும்பங்கள் உணவு ரீதியான பாதுகாப்பின்மை என்ற நிலைக்கு மாற இவற்றில் எது காரணமாக இருந்தது என்பதற்காக தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்தையும் கண்காணிப்பது என்பது நிர்வாக ரீதியாக மிகவும் கடினம்.
அனைத்து குடும்பங்களுக்கும் சலுகை விலையில் உணவுப் பொருட்களை வழங்குவது என்ற அனைவரையும் உள்ளடக்கிய திட்டம் என்பது மிகவும் செலவு பிடிக்கும் திட்டம் என்ற கருத்தும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுபோன்ற திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று ஒரு கணக்கை எடுக்கலாம். நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவுதானியம் வழங்கப்பட்டால் அதற்கு 90 மில்லியன் டன் தானியம் தேவைப்படும். தற் போதைய மானிய விலையில் கணக்கெடுத்தால் அதற்கு ரூ. 1.20.000 கோடி தேவைப்படும். பொது வாகப் பார்த்தால் இது ஒரு பெரும் தொகையாகத் தோன்றக்கூடும். எனினும் உணவுப் பொருட் களுக்கான மானியமாக ஏற்கெனவே அரசு இப் போது ரூ. 50.000 கோடி அளவிற்கு செலவிழித்து வரும் நிலையில் கூடுதலாக ரூ. 70.000 கோடியை இதற்காக செலவழிப்பது என்பதொன்றும் கடின மான செயலல்ல. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இது சுமார் 1.5 சதவீதம் மட்டுமே ஆகும்.
நாகரிகம் அடைந்துவிட்டதாகக்கூறப்படும் ஒரு சமூகத்தில் எவரொருவரும் பட்டினி கிடக்கலாகாது என்பதை உறுதிப்படுத்த இந்த அளவிற்குக் கூட பணத்தை ஒதுக்க முன்வராவிட்டால், அந்த சமூகத்தை எப்படி நாகரிகமான சமூகம் என்று கூற முடியும்? கடந்த ஆண்டில் மட்டும் வரிச்சலுகைகள் என்ற பெயரிலும், இதர சலுகைகள் மூலமாகவும் பெரும் நிறுவனங்களுக்கு ஒரு பெரும் தொகை (ரூ. 3 லட்சம் கோடி) வாரி வழங்கியதை ஒப்பிடும்போது மக்களின் பட்டினியை போக்குவதற்காக தேவைப்படும் இந்தத் தொகை மிகவும் சொற்பமான ஒன்றேயாகும். குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் 45 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவதாக இத்திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் உணவுதானியங்களுக்கான உள்நாட்டு விலைகளில் நிலையற்ற தன்மையை தவிர்ப்பதும், ஊக வாணிபப் போக்குகளை தடை செய்வதும் அவசியமாகும். பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது மட்டுமே இதற்கு பொருளல்ல. பொருட்களின் விலை உயரும் நேரத்தில் எல்லாம் அரசின் பிரச்சார உத்தியாக மட்டுமே இது செயல்படுத்தப்படுகிறது. இதற்கு ஊக வாணிபச் சந்தையை தடுப்பதும் அவசியமாகிறது. அதாவது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் மீதும் ஊக வாணிபத்தை தடை செய்ய வேண்டும் என்பதுதான் இதன் பொருளாகும்.
மேலே கூறப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே அவசியமானவை மட்டுமல்ல, நிச்சயமாக செயல்படுத்தப்படக்கூடிய நடவடிக்கைகளும் ஆகும். ஆனால் நாட்டில் உண்மையான முறையில் உணவுப் பாதுபாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு உண்மையிலேயே விருப்பம் கொண்டிருந்தால் மட்டுமே இவை சாத்தியமாகும். இதுபோன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவாக மக்களை பெருந்திரளாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை உருவாக்க முடியும்.
(இளைஞர் முழக்கம் நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Read more...

  தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!



தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.
மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.
உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.
1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )
2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )
3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை
பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,
ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )
இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.
தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.
இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.
I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.
-நன்றி வில்லவன்
http://www.vinavu.com/2009/11/25/dinamalar/

Read more...

About This Blog

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP